நூல்
1
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.
2
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு.
3
தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கெள்ப கறந்து.
4
பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
5
நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம்.
6
காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகாமம் செய்பவே - ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண்.
7
கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
8
உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு?
9
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து.
10
தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.