8. வேனில் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் | 5 |
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய இன்இள வேனில் வந்தனன் இவண்என வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் துதன் இசைத்தனன் ஆதலின் மகர வெல்கொடி மைந்தன் சேனை | 10 |
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல் கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற, மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள் கோவலன் ஊடக் கூடாது ஏகிய | 15 |
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில் பள்ளி ஏறி மாண்இழை தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும் தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் | 20 |
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினள் மயங்கி, ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி | 25 |
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி, வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச் செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, | 30 |
பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி, இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக் குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் | 35 |
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும் குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும் அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் | 40 |
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி, மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித் திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப் புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி, சண்பகம் மாதவி தமாலம் கருமுகை | 45 |
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட | 50 |
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும் திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி, அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு, | 55 |
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்இள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும் | 60 |
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும் நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல் இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என எண்எண் கலையும் இசைந்துஉடன் போக பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் | 65 |
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து விளையா மழலையின் விரித்துஉரை எழுதி, பசந்த மேனியள் படர்உறு மாலையின் வசந்த மாலையை வருகெனக் கூஉய்த் தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் | 70 |
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண் கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப, திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட | 75 |
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும், புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின் பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய | 80 |
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி வருகென வந்து போகெனப் போகிய கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும், அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச் சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் | 85 |
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும் களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச் செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து ஒருதனி வந்த உள்வரி ஆடலும், சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் | 90 |
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும் புறத்துநின்று ஆடிய புன்புற வரியும், கோதையும் குழலும் தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் | 95 |
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச் சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப் புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின் இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித் தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் | 100 |
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும், பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம் தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும், வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் | 105 |
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும், அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும் எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும், ஆடல் மகளே ஆதலின் ஆயிழை. பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன, | 110 |
அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய, மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப மாலை வாரார் ஆயினும் மாண்இழை. | 115 |
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.
(வெண்பா)
செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார் இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று வளவேல்நற் கண்ணி மனம். ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக் கானற்பா ணிக்குஅலந்தாய் காண். |
9. கனாத்திறம் உரைத்த காதை
(கலி வெண்பா)
அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர் கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்: மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் | 5 |
பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும் பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் | 10 |
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு, | 15 |
ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய் செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார் பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற் படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு | 20 |
இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன் அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர் | 25 |
குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத் தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், துய மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித் துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும் | 30 |
தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள் தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப் பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன் மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து | 35 |
நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும் தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன் மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக் கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் | 40 |
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன் கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை | 45 |
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம் பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல் கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக் காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு | 50 |
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன் தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம் உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு | 55 |
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக் கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில் மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு | 60 |
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார் போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள் ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள் பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம் | 65 |
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும் பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த | 70 |
இலம்பாடு நாணுத் தரும்எனக்கு என்ன, நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இச் சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர் | 75 |
மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயா முன்.
(வெண்பா)
காதலி கண்ட கனவு கருநெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயா முன். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.