அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்! 48
இகழாது - இகழாதே
அறம் செய்க - கொடையறம் செய்க
தன் கல்யாண நாளிலும், தேவர்க்கு சிறப்பான நாளிலும், பிதிருக்களுக்கு சிறப்பு செய்யும் நாளிலும், விழா நாளிலும், வேள்வி செய்யும் நாளிலும், விருந்தினர்க்கு சோறிட்டுக் கொடை அறம் செய்ய வேண்டும்.
நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் -
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும், தக்க செயல்! 49
உடை - உடுத்தலும்
சொற் செலவு - சொற்களைச் சொல்லுதல்
தங்களுடைய பதவிக்கும், கல்விக்கும், ஆற்றலுக்கும், குடிப்பிறப்புக்கும் ஏற்பவே உடை, நடை, சொற்கள், திட்டுதல் இவை அமையும்.
கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)
பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர். 50
இசைவு இன்றி - முறையில்லாமல்
தள்ளியும் - தவறியும்
நன்கு கற்றுத் தேர்ந்தவர், பலருள் ஒருவரைத் தூற்றார், படுத்துத் தூங்கார், தமக்குப் பொருந்தாத செயல்களை ஒப்புக் கொண்டு பின்னர் செய்யாது விடமாட்டார், வறியவரை இழிவாகப் பேச மாட்டார்.
தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்,
தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று. 51
வீழ்மீனும் - விழுகின்ற எரிநட்சத்திரத்தையும்
முன் ஒளியும் - காலை ஒளியும்
தம் கண்ணின் ஒளியும் புகழும் கெடாமல் இருக்க, மின்னலையும், எரிநட்சத்திரத்தையும், வேசியரது ஒப்பனையையும், காலை ஒளியையும், மாலை ஒளியையும் பார்க்கக் கூடாது.
தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர். 52
அசையாத - ஒழுக்கத்தினின்று தவறாத
படிறும் - வஞ்சனை சொல்லையும்
நல்லொழுக்கம் உடையவர், வஞ்சனை சொல்லையும், பயனில்லாத சொல்லையும், பழிச்சொல்லையும், புறங்கூறுதலையும் சொல்ல மாட்டார்.