56. பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என்நெஞ்சு அமர்ந்தோளே!
தலைமகன் கொண்டு தலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி, இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது
சிறைக்குடி ஆந்தையார்
57. நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன்அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது
சிறைக்குடி ஆந்தையார்
58. குறிஞ்சி
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!
கழற்றெதிர்மறை
வெள்ளிவீதியார்
59. பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.
பிரிவிடை அழிந்த சிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
மோசிகீரனார்
60. குறிஞ்சி
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங் கால் முடிவன்,
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல்கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகன் தோழிக்கு உரைத்தது
பரணர்
61. மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது
நும்பிசேர்கீரன்
62. குறிஞ்சி
கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது
சிறைக்குடி ஆந்தையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.