சச்சந்தன் கவலையுறுதல்
தூம்பு உடை நெடுங் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
தேம்புடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். 232
'எந்திர ஊர்தியைச் செய்க' என அறிவு என்னும் அமைச்சன் கூறல்
காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். 233
சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்
அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். 234
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. 235
பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய
கோல நல் மாமயிலும் கொடு சென்றவன்
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். 236
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். 237
மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்
ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். 238
பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. 239
சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்
காதி வேல் வல கட்டியங் காரனும்
நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல்
ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குணக் கோதினுள் கோது அனான். 240
மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல்
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறுமின் என்னவே. 241
தருமதத்தன் அறிவுரை கூறுதல்
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான்
தரும தத்தன் என்பான் இது சாற்றினான். 242
தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
குவளையே அளவுள்ள கொழுங் கணாள்
அவளையே அமிர்தாக அவ் அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான். 243
விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே. 244
தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப்
பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. 245
திலக நீள் முடித் தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். 246
அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. 247
உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார். 248
யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின்
தேவர் என்பது தேறும் இவ் வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார். 249
தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே. 250
வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். 251
குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகளாவார். 252
நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய். 253
பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல்
இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். 254
கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப்
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான். 255
தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்
தார்ப் பொலி தரும தத்தன் தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவளப் பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள் என வியர்த்துப் பொங்கி
நீர்க் கடல் மகரப் பேழ்வாய் மதனன் மற்று இதனைச் சொன்னான். 256
தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லிக் கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும் போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான். 257
கட்டியங்காரன் சினந்து கூறுதல்
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக்
கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். 258
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார்
உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான். 259
தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்
விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்புக் கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான். 260
கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்
நிலத் தலைத் திருவனாள் தன் நீப்பரும் காதல் கூர
முலைத் தலைப் போகம் மூழ்கி முகிழ் நிலா முடிகொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடும் கோறல் எண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான். 261
கோன் தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சிச் சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே. 262
பருமித்த களிறும் மாவும் பரந்தியல் தேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்திச்
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே. 263
கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்
நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி!
பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி!
கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான். 264
திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான். 265
புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக்
கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல்
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான். 266
விசயை துன்புறுதல்
நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்னக்
கொங்கு அலர் கோதை மாழ்கிக் குழை முகம் புடைத்து வீழ்ந்து
செங் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள். 267
மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்திப்
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப் பொம்மல் வெம் முலையினாட்குச்
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே. 268
சாதலும் பிறத்தல் தானும் தம் வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளைத் தோளி என்றான். 269
தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச்
செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா. 270
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர விம் உயிர்த்து இனையை ஆதல்
ஒண் தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான். 271
உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளஞ் சிங்கம் அன்னான். 272
விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆர் உயிர்க் கிழத்தி தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறித்
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள். 273
சச்சந்தன் கோபங்கொள்ளல்
நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான். 274
சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்
முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில்
குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை
மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே. 275
அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம்
வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான். 276
மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப்
பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே. 277
சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே. 278
வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே. 279
உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறை மகன் இரும் களிறு நூற
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி. 280
நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான். 281
நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான். 282
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான். 283
புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே. 284
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே. 285
குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கிக்
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான். 286
நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான். 287
ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான். 288
சச்சந்தன் வீழ்தல்
போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத்
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான். 289
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது
புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல்
இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த
அறச் செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா
நாகமுடன் விழுங்கிற்று அன்றே. 290
பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்
நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்
கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி
மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்
விண்ணோர்க்கு விருந்து ஆயினானே. 291
சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்
செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ்
தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத்
தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறை
போய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து
இரங்கிப் பள்ளி படுத்தார்களே. 292
சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை
நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்
மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச்
செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்
உள் அரங்கி மூழ்கக் காமன்
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்
பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்
மின்னுப் போல் புலம்பினாரே. 293
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு
வேந்தன் கிடந்தானைத் தான்
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்
கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்
ஏற்பச் சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்
பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார். 294
கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்
ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்
நின்று திருவில் வீசும்
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்
கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது
என்பார் கோல் வளையினார். 295
பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய்
ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத்
தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு
பிடிகள் போலத் துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி
அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி
இனிப் பூவா பிறர் பறிப்பவே. 296
அவலங்களுக்கிடையே கட்டியங்காரன்
மன்னன் ஆதல்
செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு
அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல்
எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப்
பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை
அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான்
பூமகளை எய்தினானே. 297
சீவகன் பிறப்பு
களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன். 298
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள். 299
மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே. 300
மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து பேயும்
அஞ்சும் அம் மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சிமேல் வீழ்வதே போல் பல் பொறிக் குடுமி நெற்றிக்
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே. 301
வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள். 302
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி
விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்தலை பயின்ற காட்டுள் விளங்கு இழை தமியள் ஆனாள். 303
இருள் கெட இகலி எங்கும் மணிவிளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த வாகி அணங்கு எலாம் வணங்கி நிற்பப்
பொரு கடல் பருதி போலப் பொன் அனான் பிறந்த போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே. 304
பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கித்
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மித் திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள். 305