நூல்
1. வேளாண் குலத்திற்கு நிகரில்லை
வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 10
2. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு
சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே. 11
3. ஏர்விழாச் சிறப்பு
நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கெளமாட்டார் போர்வேந்த ரானோரே. 12
4. அலப்படைவாள் சிறப்பு
குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்கலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே. 13
5. மேழிச் சிறப்பு
வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரனுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 14
6. ஊற்றாணிச் சிறப்பு
நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரவராலே தொல்லுலகு நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே. 15
7. நுகத்தடிச் சிறப்பு
உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்று நுகமன்றோ காராளர் உழுநுகமே. 16
8. நுகத்துளைச் சிறப்பு
வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே. 17
9. நுகத்தாணியின் சிறப்பு
ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. 18
10. பூட்டு கயிற்றின் சிறப்பு
நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல கடற்புவியில்
நீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே. 19
11. தொடைச் சிறப்பு
தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்த புகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.