70. குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அணை மெல்லியல் யான் முயங்குங்காலே.
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
ஓரம்போகியார்
71. பாலை
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
கல் கெழு கானவர் நல்குறு மகளே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது
கருவூர் ஓதஞானி
72. குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென்தோள்,
மா மலைப் பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள், பெரு மழைக் கண்ணே!
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது
மள்ளனார்
73. குறிஞ்சி
மகிழ் நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது
பரணர்
74. குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது
விட்ட குதிரையார்
75. மருதம்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்!
பொன் மலி பாடலி பெறீஇயர்!-
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?
தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது
படுமரத்து மோசிகீரனார்
76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது
கிள்ளிமங்கலங்கிழார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.