96. குறிஞ்சி
"அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?" என்றி; யான் அது
நகை என உணரேன் ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது
அள்ளூர் நன்முல்லை
97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகிய மன்றத்தஃதே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வெண்பூதி
98. முல்லை
"இன்னள் ஆயினள் நன்னுதல்" என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்து
கோக்குளமுற்றன்
99. முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே? நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன், "எம்மை நினைத்தும் அறிதிரோ?" என்ற தோழிக்குச் சொல்லியது
ஒளவையார்
100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது; அல்லகுறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
கபிலர்
101. குறிஞ்சி
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காகினார் கேட்பச் சொல்லியது; வலித்த செஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம்
பருஉமோவாய்ப் பதுமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.