83. குறிஞ்சி
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை-
தம்இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, "வரும்" என்றோளே!
தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழிவாழ்த்தியது
வெண்பூதன்
84. பாலை
பெயர்த்தனென் முயங்க, "யான் வியர்த்தனென்" என்றனள்;
இனி அறிந்தேன், அது தனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
மோசிகீரன்
85. மருதம்
யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது
வடம வண்ணக்கன் தாமோதரன்
86. குறிஞ்சி
சிறை பனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது
வெண்கொற்றன்
87. குறிஞ்சி
"மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்" என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது
கபிலர்
88. குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ்சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.
இரவுக்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது
மதுரைக் கதக்கண்ணன்
89. மருதம்
பாஅடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப;
அழிவது எவன்கொல், இப்பேதை ஊர்க்கே?-
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.
தலைமகன் சிறைப்புறத்தானகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம்
பரணர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.