77. பாலை
அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடுநல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
மதுரை மருதன் இளநாகனார்
78. குறிஞ்சி
பெருவரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!-
நோதக்கன்றே-காமம் யாவதும்
நன்று என உணரார்மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது
நக்கீரனார்
79. பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
செல்லாது ஏகல் வல்லுவோரே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகணை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
குடவாயிற் கீரனக்கன்
80. மருதம்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும்புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர்
நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடுங் காக்க, தன் கொழுநன் மார்பே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது
ஒளவையார்
81. குறிஞ்சி
இவளே, நின்சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்-
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது
வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
82. குறிஞ்சி
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு,
"அழாஅல்" என்று நம் அழுத கண் துடைப்பார்;
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழுங் கொடி அவரை பூக்கும்
அரும்பனி அற்சிரம் வாராதோரே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள், "வருவர்" என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது
கடுவன் மள்ளன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.