பத்துப் பாட்டுக்களில் பத்தாவது
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப்
பாடிய
மலைபடுகடாம்
திணை : பாடாண்
துறை : ஆற்றுப்படை
கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல்
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, 5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம் பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, 10
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,
நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்
அவர்கள் கடந்து வந்த மலை வழி
கடுக் கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில்
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின், 15
எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ் சிறு நெறி,
தொடுத்த வாளியர், துணை புணர் கானவர்,
இடுக்கண் செய்யாது, இயங்குநர் இயக்கம்
அடுக்கல் மீமிசை, அருப்பம் பேணாது,
இடிச் சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகி- 20
பேரியாழின் இயல்பு
தொடித் திரிவு அன்ன தொண்டு படு திவவின்;
கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ, வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ, 25
சிலம்பு அமை பந்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை;
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் 30
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ் வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி;
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாவை, 35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்,
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்
பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல்
அமை வரப் பண்ணி, அருள் நெறி திரியாது,
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப,
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு 40
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்,
மதம் தபு ஞமலி நாவின் அன்ன,
துளங்கு இயல் மெலிந்த, கல் பொரு சீறடி,
கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ,
விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து, 45
இலங்கு வளை, விறலியர் நிற்புறம் சுற்ற
கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல்,
புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்,
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி,
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! 50
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.