மதிலின் தோற்றம்
தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே. 100
மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா 101
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக்
கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே 102
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித்
தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே. 103
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல்
பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே 104
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல்
வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே 105
அகநகர்த் தோற்றம்
செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப்
பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான்
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் 106
பரத்தையர் சேரியின் தோற்றம்
துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச்
செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும்
உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே 107
குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப்
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே 108
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே 109
அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப்
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய்
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே 110
தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப்
பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே 111
கடை வீதிகள்
இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப்
பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன். 112
மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக்
கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே. 113
பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும்
மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பை
நண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே. 114
விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா
பழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும்
எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே. 115
மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப்
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே. 116
மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச்
செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன். 117
தெருக்களின் தோற்றம்
முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழை என மறையின பொலிவினது ஒருபால். 118
குடையொடுகுடைபலகளிறொடு நெரிதர
உடை கடல்ஒலியினொடு உறுவார் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால்.119
பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர்
நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக்
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ்
பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால். 120
மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்
அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர்
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்து
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால். 121
வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால். 122
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால். 123
வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம். 124
தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல்
பாவை அன்னவர் பந்து புடைத்தலில்
தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க்
கோவை நித்தில மாடக் குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே. 125
திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடிய
உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ
பரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப்
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே. 126
இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்
மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே. 127
செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ 128
வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து
ஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு
சேரி தோறு இது செல்வத்து இயற்கையே. 129
கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்
அருமை சான்ற அகில் புகை வாசமும்
செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில்
உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே. 130
நறையும் நானமும் நாறும் நறும் புகை
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே. 131
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார்
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே. 132
எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்
மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலை
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. 133
குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும்
அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. 134
தூமமே கமழும் துகில் சேக்கை மேல்
காமமே நுகர்வார் தம் காதலால்
யாமமும் பகலும் அறியாமையால்
பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே. 135
அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணி
உரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளன
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே. 136
முல்லை அம் குழலார் முலைச் செல்வமும்
மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே. 137
முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்
அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே. 138
திங்கள் முக்குடையான் திரு மாநகர்
எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால்
அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே. 139
தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே. 140
அரண்மனையின் சிறப்பு
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம். 141
நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்
சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. 142
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே. 143
முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே. 144
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்
செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே. 145
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே. 146
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழையம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால்
ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே. 147
மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. 148
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே. 149
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே. 150
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே. 151
கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச்
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே. 152
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும்
இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே. 153
பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே. 154
கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்
இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. 155
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப்
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே. 156
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.