சச்சந்தன் வரலாறு
நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான். 157
வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே. 158
கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இவ் வையமே. 159
தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடைத்
திருமகன் திரு மா நில மன்னனே. 160
ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான். 161
விசயையின் தோற்றம்
செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள். 162
உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே. 163
எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள்
வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே. 164
குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே. 165
வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்
கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே. 166
சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே. 167
மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே. 168
ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே. 169
மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள்
துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே. 170
தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண
ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே. 171
அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே. 172
மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப்
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே. 173
வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி
வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே. 174
பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே. 175
ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே. 176
பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே. 177
அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு
ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்
திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே. 178
என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே. 179
சச்சந்தன் விசயையை மணத்தல்
இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக்
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர்
செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான். 180
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்
மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான். 181
வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள்
பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே. 182
அரு மணி மரகதத்து அங் கண் நாறிய
எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத்
திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப்
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே. 183
கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள்
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள். 184
இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல்
மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே. 185
முந்து நாம் கூறிய மூரித் தானை அக்
கந்து கொல் கடாக் களி யானை மன்னவன்
பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல்
தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே. 186
மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே. 187
சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்
பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே. 188
காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார். 189
தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். 190
பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான். 191
பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்
களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான். 192
துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். 193
துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை
வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே. 194
இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்
தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக்
குழை முகக் கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே. 195
படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும்
கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே. 196
கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச்
செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே. 197
மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஔ நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே. 198
குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள்
திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம்
பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே. 199
சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல்
களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான். 200
அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான். 201
அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்ட
வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான். 202
எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும்
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய்
கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான். 203
வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக்
கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான். 204
எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான். 205
காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான். 206
பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித்
திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே. 207
கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை
மைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக்
கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப்
பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே. 208
நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன்
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள்
கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான். 209
காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே
நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான். 210
படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான். 211
ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும்
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான். 212
அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்கு
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான். 213
மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான். 214
இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள்
மனமாம் நெறி ஓடிய மன்னவனே. 215
கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலையார் தடமும் முனியாது படிந்து
உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர்
மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே. 216
விரி மா மணி மாலை விளங்கு முடித்
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
எரி மா மணி மார்பனும் ஏந்திழையும்
அரு மா மணி நாகரின் ஆயினரே. 217
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே. 218
பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள்
துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின்
அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடை
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே. 219
விசயை, அருகப் பெருமானை வணங்குதல்
பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன்
கண் கழூஉச் செய்து கலை நலந் தாங்கி
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள். 220
விசயை சச்சந்தனை வணங்கி, தான் கண்ட மூன்று கனவுகளைக் கூறுதல்
இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத்
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே. 221
தான் அமர் காதலி தன்னொடு மா வலி
வானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும்
தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக்
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள். 222
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே. 223
சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்
வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான். 224
நன்முடி நின் மகனாம் நறு மாலைகள்
அன்னவனால் அமரப்படும் தேவியர்
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப்
பின்னதனால் பயன் பேசலன் விட்டான். 225
அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்
இற்று அதனால் பயன் என் என ஏந்திழை
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள். 226
காவி கடந்த கண்ணீரொடு காரிகை
ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப்
பாவி என் ஆவி வருத்துதியோ எனத்
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான். 227
தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள்
கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப்
பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான். 228
காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க்
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத்
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள். 229
பண் கனியப் பருகிப் பயன் நாடகம்
கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செல
விண் கனியக் கவின் வித்திய வேல் கணி
மண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள். 230
கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்
கண் பசலை பூத்த காமம் விரும்பு ஆர் முலைக் கண்
கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன்
செப்பே போல் அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின்
புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை பெரும்
பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்
நங்கை நலம் தொலைந்ததே. 231
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.