வழியினது நன்மையின் அளவு கூறுதல்
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின், 95
புகுவது வந்தன்று இது; அதன் பண்பே:
வானம் மின்னு வசிவு பொழிய, ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய,
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து,
அகல் இரு விசும்பின் ஆஅல் போல, 100
வாலின் விரிந்த புன் கொடி முசுண்டை;
நீலத்து அன்ன விதைப் புன மருங்கில்,
மகுளி பாயாது மலி துளி தழாலின்,
அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின்,
கெளவை போகிய கருங் காய் பிடி ஏழ் 105
நெய் கொள ஒழுகின, பல் கவர் ஈர் எண்;
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப,
கொய் பதம் உற்றன, குலவுக் குரல் ஏனல்;
விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு, இருவிதொறும்,
குளிர் புரை கொடுங் காய் கொண்டன, அவரை; 110
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்,
வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி,
இரும்பு கவர்வுற்றன, பெரும் புன வரகே;
பால் வார்பு கெழீஇ, பல் கவர் வளி போழ்பு,
வாலிதின் விளைந்தன, ஐவன வெண்ணெல்; 115
வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன,
கால் உறு துவைப்பின், கவிழ்க் கனைத்து, இறைஞ்சி,
குறை அறை வாரா நிவப்பின், அறை உற்று,
ஆலைக்கு அலமரும், தீம் கழைக் கரும்பே;
புயல் புனிறு போகிய, பூ மலி புறவின், 120
அவல் பதம் கொண்டன, அம் பொதித் தோரை;
தொய்யாது வித்திய துளர் படு துடவை
ஐயவி அமன்ற; வெண் கால் செறுவில்,
மை என விரிந்தன, நீள் நறு நெய்தல்;
செய்யாப் பாவை வளர்ந்து, கவின் முற்றி, 125
காயம் கொண்டன, இஞ்சி; மா இருந்து,
வயவுப் பிடி முழந் தாள் கடுப்ப, குழிதொறும்,
விழுமிதின் வீழ்ந்தன, கொழுங் கொடிக் கவலை;
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்தென,
ஊழ் மலர் ஒழி முகை உயர்முகம் தோய, 130
துறுகல் சுற்றிய சோலை வாழை,
இறுகு குலை முறுகப் பழுத்த; பயம் புக்கு
ஊழ் உற்று அலமரும், உந்தூழ்; அகல் அறை,
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்,
காலின் உதிர்ந்தன, கருங் கனி நாவல்; 135
மாறு கொள ஒழுகின, ஊறு நீர் உயவை;
நூறொடு குழீஇயின, கூவை; சேறு சிறந்து,
உண்ணுநர்த் தடுத்தன, தேமா; புண் அரிந்து,
அரலை உக்கன, நெடுந் தாள் ஆசினி;
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப, 140
குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து,
கீழும் மேலும், கார் வாய்த்து எதிரி,
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி,
முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப் பலவே:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.