அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்
உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்,
அரசு நிலை தளர்க்கும், அருப்பமும் உடைய;
பின்னியன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,
முன்னோன் வாங்கிய கடு விசைக் கணைக் கோல் 380
இன் இசை நல் யாழ்ப் பத்தரும், விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும், ஓம்பி,
கை பிணி விடாஅது பைபயக் கழிமின்,
களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவப் பலவே; 385
ஒன்னாத் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென,
நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக, 390
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்
புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்
பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்
நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்
செல்லும் தேஎத்து, பெயர் மருங்கு அறிமார்,
கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த 395
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை,
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே:
தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவிகை
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே, 400
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்
ஆங்கனம் அற்றே, நம்மனோர்க்கே;
அசைவுழி அசைஇ, அஞ்சாது கழிமின்
கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்
புலி உற, வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி,
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து, 405
சிலை ஒலி வெரீஇய செங் கண் மரை விடை
தலை இறும்பு கதழும் நாறு கொடிப் புறவின்,
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளை ஆன் தீம் பால், மிளை சூழ் கோவலர்,
வளையோர் உவப்ப, தருவனர் சொரிதலின், 410
பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகல, புதுவிர் ஆகுவிர்;
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன,
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ,
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் 415
பல் யாட்டு இனம் நிரை எல்லினிர் புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்;
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி,
தீத் துணை ஆகச் சேந்தனிர் கழிமின் 420
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.