மன்னனின் செயல்
அந்நிலை யுணர்ந் தடங்கிய தென்றனர் மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச் சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும் அன்னம் பானெய்யினன்புடனூட்டெனும். | 340 |
கவள நாடொறு மூட்டெனுங் காவலன் பவள மாமெனும் பண்ணவர் தம்மடி திவளு மாமுடி சேர்த்து வணங்கியே உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன். | 341 |
உதயணன் முனிவரை வினவுதல்
மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக் குதவக் காரண மென்னெனக் கூறலும் சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர் மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார். | 342 |
முனிவர் கூற்று
உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார் கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே வெள்ளி யம்மலை மேல்வட சேடியில் வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள். | 343 |
சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன் அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம் செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை உகந்து பெற்றன ளோர் புகழ்க் கோமுகன். | 344 |
காமனென்னுமக் காளைகைத் தாய்பெயர் சோமசுந்தரி யென்னுஞ் சுரிகுழல் நாம வேன்மகனன்மை விசையனும் சேம மித்திர ராகச் சிறந்தனர். | 345 |
ஒழியாக் காதலுடன்விளை யாடியே வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும் நழுவில் காட்சியனாமவேற் கோமுகன் ஒழிய நல்லுயி ரோங்கிநீ யாயினை. | 346 |
விசையின் றன்னுயிர் விட்டந் தணனாய் வசையில் காம மயங்கிய மோகத்தின் இசையினாலுயிர் நீங்கியே யிங்குவந் தசையு ணாக்களி றாயின தாகுமே. | 347 |
மித்திரன்முன்பு வீறுநற் காதலால் அத்தி மேலுனக் கன்புமுன் டானதால் வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின் ஒத்த வாயுவு மோரெழு நாளென்றார். | 348 |
உதயணன் வருந்திக் கூறுதல்
திருந்து ஞானத்திற்றோர்ந்த முனியுரை பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய் வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச் சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான். | 349 |
உதயணன் செயல்
வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால் வெஞ்செம் முள்ளினை வீரிட வூன்றியும் மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன் குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே. | 350 |
காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே போத வெங்கும் புரவலன் றைவரப் போத கம்மிகப் பொற்பினிறைஞ்சலிற் காத லிற்றிண் களிற்றியல் கூறெனா. | 351 |
உதயணன் அரண்மனை புகுதல்
யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன் தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர் ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச் சேனை சூழத் திருமனை சேர்ந்தனன். | 352 |
உதயணனின் வழிபாடு
சீலமும் வளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை காலையவ்வு ழையர் வந்து கண்டுரைப்ப மன்னனும் ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின் பாலடிசினெய்யருந்திப் பாரரசன் செலுநாள். | 353 |
உதயணனின் செயல்
சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும் நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச் சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகவும் நல்லலவென் றுணர்ந்தனனேமியனைவா வென்றனன். | 354 |
நரவாகனனிடம் உதயணன் கூறுதல்
அவனும் வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான் அவனியுன தாகவா ளென்ன மன்னன் செப்பினன் தவவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன். | 355 |
கோமுகனுக்கு முடிசூட்டுதல்
வத்தவன்னிறைவனாக மன்னுகோ முகனுக்கு வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின் சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான். | 356 |
உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும்
தேவியீர் நீர் வேண்டியதென் றிருமனை துறந்துபின் மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும் போவதுபொ ருளெமக்குப் புரவலனே நின்னுடன் தாவில்சீர் விழுத்தவழுந் தாங்குதுமென் றிட்டனர். | 357 |
உதயணனுடன் தேவியரும் செல்லல்
உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன் பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும் மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக் கருண்முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர். | 358 |
உதயணன் முனிவரிடம் வேண்டுதல்
நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின் தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே ஏத்தற முரைத்திட வினிமை வைத்துக் கேட்டனன் ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான். | 359 |
உதயணன் முதலியோரின் தவக்கோலம்
காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச் சீலமாதி யாயொழுக்கஞ் சீருடனளித்துப்பின் கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர். | 360 |
அனைவரின் தவநிலை
அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும் பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள் அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே. | 361 |
புறத்தினும் மகத்தினும் போகத் தொடர்ப் பாடுவிட் டறத்திடை யருளினா லாயிருரை யோம்பியும் திறத்துடன் சமிதியுஞ் சிந்தையின்னடக்கமும் திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றினார்களே. | 362 |
ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன் மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும் பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர். | 363 |
சுத்திமீக வெட்டினோடுஞ் சூழ்ந்தயோகு வொன்பதாம் பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும் சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன் ஒத்தபங்க மீரேழு மொருங்குடன் பயின்றனர். | 364 |
உதயணன் கேவல ஞானம் எய்துதல்
உதயண முனிவனு மோங்குமாவரைதனில் இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய் இதமுறு தியானத்தினிருவினை யெரித்துடன் பதமினிது சித்தியெய்திப் பரமசுகத் திருந்தனன். | 365 |
தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல்
அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும் சமைத்தநோன்பு நோற்றுயர்ந்து சமாதிறன் மரணத்தின் இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய் அமைத்தவச் சுதம்மள வானபாடியின்புற்றார். | 366 |
தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல்
பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும் அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும் கற்புடைமனத்திலெண்ணிக் காணற்கரி தாகவே விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர். | 367 |
காண்டங்களின் செய்யுட் தொகை
உஞ்சை நற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீரெட்டு விஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்பதாகும் எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத்தஞ்சாம் அஞ்சுடனைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே. | 368 |
[நூற்றீரெட்டு - நூற்றுப்பதினாறு.
கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பயன் கூறும் செய்யுள், உள்ளிட்ட நான்கு
செய்யுள் நீங்கலாக உஞ்சைக் காண்ட செய்யுட்தொகை]
நறுமலர் மாலை மார்பனரவாக காண்டந் தன்னில் அறுபது மொன்று மாகு மாகிய துறவுக் காண்டம் அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந் திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகுமன்றே. | 369 |
உதயண குமார காவியம் முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.