சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்துஅரசி ஆக்குதல்
31 | அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச் செவ்விதில் செப்பச் சீருடை மன்னனும் மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத் தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன். |
32 | மன்னன் இன்புற்று மாதேவி ஆகவே நன்மைப் பட்டம் நயந்து கொடுத்தபின் மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட இன்ன ஆற்றின் இயைந்துடன் செல்லுநாள். |
பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு
33 | வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும் நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுள் பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி கயந்தம் நீர்அணி காண்டற்குச் சென்றநாள். |
34 | வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள் வார்அணி கொங்கை யார்அவள் என்றலும் ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்று தார்அணிகுழல் தாதி உரைத்தனள். |
பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்
வேறு
35 | வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக் கால்மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று பால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து நூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே. |
ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்
வேறு
36 | கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார் பொல்லாக் கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச் செல்லற்கு எளிதென்றே சேயிழையாள் தான்பரவி எல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள். |
முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்
37 | பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்த அணிபெறவே நல்தவமும் ஆமோ எனக்குஎன்றாள் கணிதம்இலாக் குணச்சுதனைக் கீர்த்திஉடனேபெறுவை மணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான், |
38 | நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப் பின்றை அறஉரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி வென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்து அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள். |
வேறு
39 | நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு பற்றுடன் உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல் உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம் தன்னில் வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள். |
இரண்டாம் சருக்கம்
சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்
40 | வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்து மனமகிழ் கோதை தன்னை மருவிய காதலாலே புனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்ன கனவரை மார்பன் கேட்¢பக் காரிகை உரைக்கும் அன்றே. |
41 | இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீய கறைஇலா முனிவன் பாதம் கண்டுஅடி பணிந்து தூய அறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம் மகிழ்ந்து பிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார். |
பிரிதிதேவி கண்ட கனவு
42 | இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்¢து மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம் இருள்மனை இமில் ஏறுஒன்றும் இளங்கதிர் கனவில் தோன்றப் பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே. |
சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்
43 | வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள்
சென்று சேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான் ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார். |
புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்
44 | அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச் செம்மையின் இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும் கம்பம்இல் நிலங்கள் எல்லாம் காத்துநல் தவமும் தாங்கி வெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார். |
புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்
45 | தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்று புனைமலர் அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப நினைமின்அக் குறிகள் உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின் தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான். |
திகம்பர முனிவரின் மறுமொழி
வேறு
46 | பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில் நின்சிறுவன் சரணத்தான் நீங்கும் திருக்கதவம் நன்நாக வாவிதனில் நழுவப் பதமும்உண்டாம் மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான். |
47 | அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடு இருவரும் இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்து பருமுகில் தவழும்மாடப் பஞ்சநல் அமளிதன்னில் திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள். |
பிரிதிதேவி கருக் கொள்ளுதல்
வேறு
48 | புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம் மண்இனிது உண்ண எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும் பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே. |
புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்
49 | திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில்
தோன்றப் பொங்குநீ¢ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை ஆகித் தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச் சிங்கம்நேர் சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார். |
பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்
50 | பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும் அரியநல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி விரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப் பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே. |
ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்
51 | சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப் பிறைநுதல் தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள் நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக் காணாச் சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே. |
52 | கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப் பிறைஎயிற்று அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டு பறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து இறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே. |
நாககுமாரன் எனப் பெயர் பெற்றது
53 | நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணி நாகநல் குமரன் என்று நரபதி நாமம் செய்தான் நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி இன்ப நாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள். |
கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்
54 | கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும் அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார் என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன் காண்க என்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே. |
55 | இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்று அசைவிலா மன்னன் தானும் அதிசய மனத்தன் ஆகித் திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல் என்ன வசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன். |
நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்
56 | பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும் துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள் அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர் தாமும் புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார். |
நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்
57 | நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்ல நாகநல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு வேகத்தின்¢ விட்டுவந்து வேந்தநீ கொள்க என்ன வாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான். |
58 | மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு உற்றஊர் வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டி வெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ கொள்க என்றான் பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே. |
நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்
59 | அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும் திறவதின் எய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப் படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம் பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான். |
விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன
சொற்கள்
60 | தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள் தேசநல் புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப் பேசஓணா வகையில் கேட்டேன் பெருந்தவம் இல்லை நீயும் ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள். |
சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்
61 | சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகி குறிகொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச் செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை அறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள். |
நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்
வேறு
62 | குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள் மமரநீரில் ஆடவே வன்னமாலை குங்குமம் சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில் சமையும்மாட மீமிசைச் சயந்தரன் இருந்ததே. |
விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்
63 | வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள் போந்தனள் மனைவியால் புணரும்சோரன் தன்னிடம் பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை ஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.