பௌத்த சமய மறுப்பாக எழுந்த நீலகேசி பௌத்த சமயக் கோட்பாடுகளை முழுமையாக விவாதித்து, அவற்றினும் மேலானவை சமண சமயக் கோட்பாடுகள் என எடுத்துரைப்பது. ஆசிரியரின் சமயப் புலமைக்கு இது சான்றாகிறது. பௌத்த சமயம் மட்டுமன்றி ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேதம், லோகாயுதம் ஆகிய அறிவார்த்தமான சமயச் சிந்தனைகளையும், அவ்வச் சமயக் கணக்கரொடு வாதம் செய்து சமணத்தின் சிறப்பினையும் எடுத்துரைக்கும் நீலகேசி ஆசிரியரின் பிற சமயப் புலமை மேலும் விளங்குகிறது.
நீலகேசி கபிலையில் புத்தனை வென்று, தமிழகத்தில் உறையூரை அடைந்து அங்குள்ள அருகக் கடவுளை வணங்கி மீண்டும் வடநாடு செல்கிறாள். அங்குச் ‘சமதண்டம்’ நகரை அடைந்து ஆசீவக சமயத் தத்துவ ஞானி பூரணனைச் சந்தித்துச் சமய வாதத்தில் ஈடுபடுகிறாள். இங்குச் சாங்கியத்தைத் தோற்றுவித்த ‘மற்கலி’ பற்றியும், அவர்தம் வேதமான ‘நவகதிர்’ நூல் பற்றியும் விவாதம் நிகழ்கிறது. இங்கு ஆசீவகரின் நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகிய அணுக்கோட்பாடும், உள்ளது கெடாது, இல்லது தோன்றாது, ஆவது ஆகும், ஆகுமாறே ஆகும், ஆகும் அளவே ஆகும், ஆகும் காலத்தே ஆகும் என்னும் கோட்பாடுகளும் தருக்க ரீதியாக மறுக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.