அடுத்து அத்தினாபுரத்தில் சமயச் சொற்போர் நிகழ்த்தும் பராசரன் என்னும் சாங்கியத் தத்துவ வாதியுடன் விவாதிக்கிறாள் நீலகேசி. இங்குச் சாங்கியத் தத்துவத்தில் ‘பரமாத்மா’ பற்றிய கோட்பாடு விவாதிக்கப்படுகிறது. அவன் செயலற்றவன், குணமற்றவன், உள்பொருளாய் உள்ளவன், வேற்றுமை இல்லாதவன், பற்றில்லாதவன், அழிவற்றவன், காண்பானும் நுகர்வானும் ஆவான் என்பவை விவாதத்தில் நீலகேசியால் மறுக்கப்படுகின்றன. பின் பராசரன் கொள்கையைச் சிதைத்து அவனைச் சமணத்தைத் தழுவச் செய்து, வைசேடிக சமய ஆசிரியன் உலக சித்து என்பவனை வெல்ல அவனது தவப் பள்ளி அடைகிறாள். இங்குத் திரவியம், குணம், தொழில், பொது, சிறப்பு, கூட்டம் என்னும் வைசேடிக தத்துவங்களில் பின்னைய மூன்றும் மறுக்கப்பட்டு உலக சித்து சமண சமயம் சார்கிறான்.
உலக சித்தை வென்ற நீலகேசி பூதியன் என்னும் வேதியனைக் காகந்தி நகரில் எதிர் கொண்டு, வேத சமயத்தை குறிப்பாக வேதம் அநாதி; அது ஆதியும் அந்தமும் இல்லாத சுயம்பு என்பதை அநாதியாகக் கிடக்கும் மலத்தைச் சுட்டி மறுக்கிறாள். பின் வேதியரின் சாதீயக் கோட்பாடும், அவர்தம் வேள்விக் கொலையும், ஊன் உண்ணும் வழக்கமும் பழிக்கப்படுகின்றன. இது ஒருவகையில் ஆரியர் எதிர்ப்புக் குரலாக வெளிப்படுகிறது. இறுதியாகக் கடவுளும் மறுபிறப்பும் இருவினைப் பயனும் இல்லை என்கின்ற பூதவாதச் சிந்தனையாளரான பிசாசிகனுடன் வாதிட்டு, வென்று அவனுக்கும் சமண நல்லறம் ஓதி அவனைத் திருத்துகிறாள். இங்ஙனம் நீலகேசியின் காப்பியக் கட்டமைப்பு முழுக்க முழுக்கச் சமய வாதமாக அமைகின்றது. தமிழில் தோன்றிய முதல் ‘தருக்க இலக்கியம்’ இது எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.