பிரச்சோதனன் உதயணனைத் தழுவுதல்
சால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி கால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான். | 101 |
பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல்
மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப் பெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான். | 102 |
உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்
வேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும் பூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள் வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச் சேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே. | 103 |
மன்னன் மைந்தர் அரங்கேறுதல்
உரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள் அரசிளங்குமரர் வித்தை யண்ணனீ காண்கவென்ன வரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி வரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான். | 104 |
வாசவதத்தை யாழ் அரங்கேற்றம்
வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ் பேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி ஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே ஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான். | 105 |
வாசவதத்தை யாழ் இசையின் மாண்பு
விசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும் பசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார் வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும் அசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே. | 106 |
பிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல்
வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி வத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும் வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன வத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார். | 107 |
பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்
ஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை ஈரிரண்டாயிரங்களெழின் மணிப் பொன்னின்றேரும் போரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும் வீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான். | 108 |
யூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல்
யூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி வாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம் நகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப் போக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான். | 109 |
பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு தீயிடுதல்
மன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று துன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட நன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப உன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே. | 110 |
உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்
பயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக வயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும் நயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி கயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே. | 111 |
வயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச் செயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப வியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான். | 112 |
நலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு நிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம் நலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக் குலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே. | 113 |
பிடி வீழ்தல்
அசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி இசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத் தசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில் இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே. | 114 |
உதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல்
உவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப் பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத் தவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித் துவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள். | 115 |
வயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல்
பாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும் பூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப வாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான் போவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான். | 116 |
வேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல்
சூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு நாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று வீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து சூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார். | 117 |
உதயணனுடன் வேடர் போர் செய்தல்
வந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும் தந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும் வெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ நந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான். | 118 |
வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன் வரவும்
செய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன் உய்வகையுங்களுக்கின்றுறு பொருளீவன் என்ன ஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ மெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான். | 119 |
உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்
அன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார் இன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற நன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப் பண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான். | 120 |
இலாவாண காண்டம்
உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும் தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின் என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான். | 121 |
உதயணன் வாசவதத்தை திருமணம்
இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால் நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல் புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன் அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான். | 122 |
கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில் ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும் பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான். | 123 |
உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்
இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன் கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான் அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம் விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான். | 124 |
ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன் எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற் பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன் எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன். | 125 |
மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன் உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன் விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான். | 126 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.