யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்
இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன் முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின் அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே. | 127 |
சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும் உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும் தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும் குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும். | 128 |
இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும் குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின் இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான். | 129 |
யூகியின் செயல்
சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன் ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர் நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும் பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன். | 130 |
படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன் முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள் இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள். | 131 |
சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்
வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின் சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன் போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள். | 132 |
உதயணன் செயல்
அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத் தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள் புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின் தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன். | 133 |
உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்
முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக் கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள் துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான். | 134 |
உதயணனன் தழைகொண்டுவரப் போதல்
கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன் கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான். | 135 |
யூகியின் செயல்
மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத் துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய் தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர். | 136 |
சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்
நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந் தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன் துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான். | 137 |
யூகி வாசவதத்தையை வரங்கேட்டல்
என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள். | 138 |
உதயணன் மீண்டும்வந்து வருந்துதல்
சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக் கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென் றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக் கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன். | 139 |
பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய் மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான் நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான். | 140 |
உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்
கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின் எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர் நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான். | 141 |
மனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல்
மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன் கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான் புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன். | 142 |
மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும் தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும் வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும். | 143 |
நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம் கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம் சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன். | 144 |
வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான். | 145 |
அமைச்சர் தேற்றுதல்
துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன் இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன். | 146 |
யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல்
அண்ண றன்னிலை அறிந்த யூகியும் திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு மண்ணு வாவினை மன்னன் அண்டையில் எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான். | 147 |
வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்
தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான் துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன் மன்னற் குறுதி மறித்தினிக் கூறும் பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப. | 148 |
வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில் இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன் தத்துவ முனியுளனாமினிச் சார்வோம். | 149 |
உதயணன் மகதநாடு செல்லல்
வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே. | 150 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.