சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான் நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும் வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான். | 151 |
செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே. | 152 |
உதயணன் மகதநாடு அடைதல்
கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம் காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன் காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான். | 153 |
அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்
மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம் தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன் இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற் பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே. | 154 |
காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்
காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற் சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில் நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே. | 155 |
காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்
திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும் தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும். | 156 |
பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்
பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத் திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள். | 157 |
உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்
யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக் காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின் சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே. | 158 |
உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்
எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும் மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத் தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார். | 159 |
பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்
மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத் தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக் காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும். | 160 |
அமைச்சன் உருமண்ணுவாவின் உரை
ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப் போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும் போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே. | 161 |
அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்
உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள் மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள் மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான். | 162 |
உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்
யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப் பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில். | 163 |
சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு
அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப் படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான் முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான் உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார். | 164 |
மகதத்தை அழிக்கத் துவங்குதல்
தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார் தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான். | 165 |
அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி
கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார். | 166 |
மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம் இன்னு ரைகளியல்பின் வரவரத் துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை உன்னினர்கரந் துரைகள் பலவிதம் | 167 |
பகைவர் ஐயுற்று ஓடுதல்
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின் முரியும் சேனை முயன்றவ ரோடலிற் றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம் மருவி யையம் மனத்திடை நீங்கினார். | 168 |
பகைவர் கூடி விவாதித்தல்
இரவு பாசறை யிருந்தவர் போனதும் மருவிக் கூடியே வந்துடன் விட்டதும் விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின் அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன். | 169 |
அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்
வார ணிக் கழல் வத்தவன் றன்செயல் ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக் கேரணிய ரசருக் கியல் கூறலும் தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன். | 170 |
தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்
ஆரா வுவகையுள் ளாகி யரசனும் பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன் நேரா மாற்றரை நீக்குவனானென்றான். | 171 |
படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும் நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப் புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன் நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன். | 172 |
உதயணன் பதுமாவதி மணம்
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத் தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின் மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன். | 173 |
தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்
புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின் பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன் துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம் அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே. | 174 |
அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும் நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும் பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும் உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும். | 175 |
சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம் பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன். | 176 |
வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச் செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன் எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.