'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல்
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்
மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு,
யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும்,
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய,
துனை பறை நிவக்கும் புள்ளினம் மான, 55
புனை தார்ப் பொலிந்த வண்டு படு மார்பின்,
வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள்
மலர் போல் மழைக் கண் மங்கையர், கணவன்;
முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்,
இசை நுவல் வித்தின் நசை எர் உழவர்க்குப் 60
புது நிறை வந்த புனல் அம் சாயல்,
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி,
வில் நவில் தடக் கை, மே வரும் பெரும் பூண்,
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு,
உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த 65
புள்ளினிர் மன்ற, எற்றாக் குறுகுதலின்
கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்
ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும்,
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்,
மலையும், சோலையும், மா புகல் கானமும்,
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப, 70
பலர் புறம் கண்டு, அவர் அருங் கலம் தரீஇ,
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்,
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு,
தூத் துளி பொழிந்த பொய்யா வானின், 75
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்,
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து,
வல்லார் ஆயினும் புறம் மறைத்து, சென்றோரைச்
சொல்லிக் காட்டி, சோர்வு இன்றி விளக்கி,
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும், 80
நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல்,
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன, அவன் வசை இல் சிறப்பும், 85
இகந்தன ஆயினும், தெவ்வர் தேஎம்
நுகம் படக் கடந்து, நூழிலாட்டி,
புரைத் தோல் வரைப்பின்வேல் நிழல் புலவோர்க்குக்
கொடைக் கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்,
இரை தேர்ந்து இவரும் கொடுந் தாள் முதலையொடு 90
திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின்,
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி,
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்,
கேள் இனி, வேளை நீ முன்னிய திசையே:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.