பிரச்சோதன மன்னன்
உரைப்பரும் படையோர் பிரச் சோதனன் நிரைத்த மன்னர் நிதி மிக்களப்பவே தரித்த நேமியுருட்டித் தரணியாண்டு உரைத்த மாக்களி ற்றே றேறோடு மன்னுவான். | 32 |
பொருவின் மன்னவன் பொன் திறை கேட்புழித் திருவமன்னர் திறை தெரியோ லையுள் ஒரு மகன் புள்ளியிட்ட தறிந்திலன் மருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன். | 33 |
பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்
தாமரைக் கண்டழல் எழ நோக்கியத் தீமை செய்த திறைக் கடன் மன்னனை நாமறந்திட நன்கு மறைத்த தென் ஆமமைச்ச ரென்று அண்ணல் வினவினான். | 34 |
அமைச்சர் விடை
உறு களத்தினில் உன்னிய ஆண்மையும் பெறு பொருள்செறி பீடுடைக் கல்வியும் தறுகண் வேழம் தசைக்குறு பெற்றியும் மறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும். | 35 |
வளமையின் வந்த மன்னிய செல்வமும் இளமை இன்பம் எழில் நல நற்குலம் உளவன் ஆதலின் உற்ற கடனென அளவு நீதி அமைச்சர் உரைத்தனர் 36 |
பிரச்சோதனன் சினவுரை
வேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன் போந்தவற் பற்றிப் போதரு வீரெனச் சேர்ந்த மைச்சரகள் செய்பொருள் என்னென்று மாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார். | 37 |
அமைச்சர் சூழ்ச்சி
ஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும் ஆனை போக அரசன் இரக்கமும் கான யானையைக் காட்டிப் பிடிப்பதும் மான வேலவர் மந்திரித்து ஒன்றினார். | 38 |
அமைச்சர் மாய யானை செய்தல்
அரக்கினும் மெழு காக்கிய நூலினும் மர த்தினுங்கிழி மாவின் மயிரினும் விரித்த தோலினும் வேண்டிய வற்றினும் தரித்த யானையைத் தாமிக் கியற்றினார். | 39 |
அமைச்சர்கள் யானையை செலுத்துதல்
பொறியமை சுரிப் பொங்கும் உதரத்தில் உறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை மறையு மாயுதம் வைத்த தனோருடல் நெறி கண்டூர்ந்தனர் நீல மலையென. | 40 |
சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்
கார்முழங்கில் களிறொலி செய்யவே போர் மிக்க ஆனையைப் பொற்புடை மன்னன்முன் ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள் சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன். | 41 |
சாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்
சாலங் காயநீ சார்ந்து தருகென ஞாலம் காக்கு நரபதி செப்பலும் வேலுங் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக் கோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன். | 42 |
நாற்பெரும் படையின் அளவு
ஈரெண் ணாயிரம் எண்வரை யானையும் ஈரெண் ணாயிரம் ஈடில் புரவியும் ஈரெண் ணாயிரமின் மணித் தேருடன் ஈரெண் ணாயிர விற்படை யாளரே. | 43 |
இத்தனையும் இயல்புடன் கூடியே மெத்தெ னாவரு கென்று விடுத்துடன் ஒத்த நற்பொறி யோங்கிய யானையும் வத்தவன் தன் வனத்திடை வந்ததே. | 44 |
பொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்
அவ்வ னத்தினி லான் பிடிகளும் கவ்வு கைத்தழைக் காரிடி யானைதன் மவ்வ லம்மத வண்டெழ வீசலும் அவ்வ னச்சரர் அன்புடன் கண்டனர். | 45 |
எம்மி றையது வேழமென எண்ணித் தம்மில் ஓடி உதையற்கு ரைத்தலும் கொம்மை வண்மணிக் கோலக் கலினமாச் செம்மலும் சிறந் தேறி நடந்தனன். | 46 |
உதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்
புள்ளிடை தடுப்பத்தீய பொய்குறி செய்யக்கண்டும் வள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப்போந்து கள்ளவிழ் மலர்க்கானத்துக்கள்ள நல்லியானை கண்டே உள்ளமெய்மொழி கடம்மால் உணர்ந்தவன் இனியனானான். | 47 |
நக்க ணத்தை நயந்துடன் நோக்கிலன் அக்க ணத்தி லகமகிழ் வெய்தித் தன் மிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன் தக்க ராகத்திற்றான் மிக வாசித்தான். | 48 |
பொய்யானை உதயணன் பால் வருதல்
பொறியின் வேழத்தின் பொங்கு செவியுற உறுமனத் துடனூர்ந்து முன்னே வர மறையு மாந்தர் கைம்மாவை அழித்திடப் பொறி கழன்றது போர்ப்படை யானதே. | 49 |
போர் நிகழ்ச்சி
செறுநர் செய்தது சித்திர மாமென முறுவல் கொண்ட முகத்தினனாகத் தன் உறு வயந்த கனுற்றவைந் நூற்றுவர் மறுவில் வீரியர் வந்துடன் கூடினார். | 50 |
கரந்திருந்த களிற்றுனுட் சேனையும் பரந்து முன்வந்து பாங்கில் வளைத்தபின் விரிந்து வத்தவன் வெகுண்டுவில் நூறினான் முரிந்து சேனை முனையின் மடிந்ததே. | 51 |
சாலங் காயனும் சார்ந்து வெகுண்டிட நாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும் மேலெ ழுந்து மிகவும் வளைத்தன காலன்போல் மன்னன் கண்கள் சிவந்தவே. | 52 |
புல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக் கொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண வில்வாள் தம்முடன் வீரர் அழிந்திட வல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன். | 53 |
கொன்ற போரில் குருதிஆறு ஓடவும் நின்ற மாந்தர்கள் நீங்கி விட்டோ டவும் கன்றிஉள் சாலங் காயனும் மேல்வர மன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன். | 54 |
மந்திரீகளை மன்னர் வதை செயார் புந்தி மிக்கோருரை பொருட் டேறித்தன் செந்தி வாளை அழுத்திலன் செல்வனும் அந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன். | 55 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.