இக்காப்பியம் முப்பது காதைகளைக் கொண்டது. இவற்றுடன் பதிகம் ஒன்றும் இடம் பெறுகின்றது. இவற்றை நோக்கச் சிலப்பதிகாரத்தை அடியொற்றி இந்நூல் எழுந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இரு காப்பியங்களின் பதிகங்களுமே மூல நூலாசிரியர்களால் பாடப் பெறவில்லை என்பது தெளிவு. சிலப்பதிகாரம் முதன் முதலில் காதை என்ற பெயரைப் பயன்படுத்தினாலும் அதில் சில உட்பிரிவுகள் காதை என்ற பெயரைப் பெறவில்லை. மணிமேகலையில் முப்பது காதைகளுமே காதை என்ற பெயரையே தாங்கி நிற்கின்றன. மணிமேகலைக் காப்பிய உட்பிரிவு காதை என்றிருந்தாலும் சிலம்பு போலக் காண்டம் என்ற பெரும் பிரிவு இடம் பெறவில்லை. இவ்வேறுபாடுகள் மட்டுமல்ல; காதைப் பாடல் அமைப்பிலும் கூட மணிமேகலை வேறுபட்டு நிற்கிறது. சிலம்பின் காதைகள் பெரும்பாலும் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்தன. என்றாலும் சில காதைகள் பல, யாப்பு அமைப்பைக் கொண்டுள்ளன. மணிமேகலைக் காப்பியத்திலோ அனைத்துக் காதைகளும் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. தொடர்நிலை அமைப்பிலும் சிலம்பிலிருந்து இக்காப்பியம் வேறுபடுகிறது. சிலம்பில் பல காதைகள் தொடராத் தொடர் நிலையாக (Discontinuous narration) அமைந்துள்ளன. மணிமேகலைக் காப்பியக் காதைகள் அனைத்தும் சொற்பொருள் தொடர்நிலையாகவே அமைந்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.