கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 23 ஜனவரி, 2012

ஆசாரக்கோவை-10


நீர் குடிக்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால்,
கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இரு கை
சொறியார், உடம்பு மடுத்து. 28


பருகார் - குடியார்
கொள்ளார் - வாங்கார்


இரண்டு கைகளாலும் தண்ணீர் குடியார். ஒரு கையால் பெரியோர்க்கு கொடுக்க மாட்டார், வாங்க மாட்டார். இரண்டு கைகளையும் வைத்து சொறிய மாட்டார்.




மாலையில் செய்யக் கூடியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


அந்திப் பொழுது, கிடவார், நடவாரே;
உண்ணார், வெகுளார், விளக்கு இகழார்; முன் அந்தி
அல்கு உண்டு அடங்கல் வழி. 29


அந்திப்பொழுது - மாலைப் பொழுதில்
கிடவார் - படுத்துத் தூங்கார்


மாலைப் பொழுதில் படுத்துத் தூங்குவதும், உண்ணுதலும், நடத்தலும் கூடாது. மாலையில் உண்ணமாட்டார், கோபப்படமாட்டார். முற்பொழுது விளக்கு ஏற்றி இரவில் உண்டு உறங்குதல் நன்று.


உறங்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது,
வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள்
உடல் கொடுத்து, சேர்தல் வழி. 30


கிடக்குங்கால் - படுக்கும்பொழுது
தலைசெய்யார் - தலைவைக்காமல்


படுக்கும்பொழுது கடவுளை வணங்கி, வடதிசையில் தலை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும்.


இடையில் செல்லாமை முதலியன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


இரு தேவர், பார்ப்பார், இடை போகார்; தும்மினும்,
மிக்கார் வழுத்தின், தொழுது எழுக! ஒப்பார்க்கு
உடன் செல்க, உள்ளம் உவந்து! 31


தும்மினும் - ஒருவர் தும்மினாலும்
உள்ளம் உவந்து - மனம் மகிழ்ந்து


இரண்டு தெய்வங்களுக்கு இடையிலும், பார்ப்பார் பலர் நடுவும் போகக் கூடாது. தும்மும்போது பெரியார் வாழ்த்தினால் அவரை வணங்க வேண்டும். வெளியில் செல்லும் போது நண்பர் எதிர்பட்டால் மனம்மகிழ்ந்து அவருடன் செல்ல வேண்டும்.


மலம், சிறுநீர் கழிக்கக் கூடாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)


புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார்-உணர்வு உடையார். 32


பைங்கூழ் - பயிருள்ள நிலத்தினும்
ஆப்பி - பசுவின் சாணத்தின்


அறிவுடையார் புல்லின் மீதும், பயிர் நிலத்தும், பசுவின் சாணத்தின் மேலும், சுடுகாட்டிலும், வழியிலும், தண்ணீரிலும், ஆலயங்களிலும், நிழலுள்ள இடத்திலும், சாம்பலிலும் ஆகிய பத்து இடங்களில் எச்சில் உமிழ்தலையும், மலசலங்கழித்தலையும் செய்ய மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;