உதயணன் விரிசிகை மணம்
தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட் காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட பூவின் மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத் தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தானன்றே. | 240 |
உதயணனின் ஆட்சிச் சிறப்பு
நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்னனுள்ளத் துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத் திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான். | 241 |
நரவாகன காண்டம்
வாசவதத்தை மசக்கை எய்துதல்
எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும் பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னை வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும் முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242 |
வாசவதத்தையின் விருப்பம்
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட் பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும் குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணி அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே. | 243 |
உருமண்ணுவாவின் உரை
உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப் பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம் மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப் பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே. | 244 |
இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்று மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான் சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான் பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான். | 245 |
தேவன் கூற்று
பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும் நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி வலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச் சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும். | 246 |
மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லை பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னை உத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச் சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான். | 247 |
உதயணன் உரை
எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம் திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றி எங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்ன நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான். | 248 |
தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்
வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின் உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள் கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப் புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான். | 249 |
அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும் மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம் உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்ற பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார். | 250 |
உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்று பொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்ற மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும் இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார். | 251 |
நரவாகனன் பிறப்பு
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப் போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச் சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம். | 252 |
மக்கட்குப் பெயரிடுதல்
நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான் விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம் பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன் குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே. | 253 |
நரவாகனன் கலைபயிலுதல்
நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்தி பான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம் மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப் பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே. | 254 |
நரவாகனன் உலாப் போதல்
ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன் மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர் வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர் சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான். | 255 |
நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்த வளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனி குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக் களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான். | 256 |
நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு இட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்று மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின் இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே. | 257 |
மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து மருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான் திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே. | 258 |
மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டே இன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்ப மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே. | 259 |
வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி இன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப் பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகி நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே. | 260 |
வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப் புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான் தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால். | 261 |
மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்
மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல் வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள் இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன் புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள். | 262 |
தாது திர்ந்து தரணியிற் பம்பிட மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல் பேதையைக் கண்டுபீடுடைக் களையும் தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன். | 263 |
மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்
ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத் தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன் பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப் பாங்கில் வந்து பலவுரை செய்தனள். | 264 |
நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை வேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக் காட்டவே கண்டு காளை கலந்தனன் ஊட்ட வேகணை யுன்னத மாரனே. | 265 |
மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்
மன்னு விஞ்சையின் மானச வேகனும் துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன் உன்னி வந்தவள் போன தறிந்துரை பன்னி வந்திரு வோரையும் பற்றினன். | 266 |
மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின் ஈனகஞ் செல வேலக் குழலியும் தான கம்விஞ்சை தானுடன் விட்டனள் கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன். | 267 |
நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக் கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம் எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனி கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன். | 268 |
போதி தன்வலிப் போத வுணர்ந்து தன் காதலிற்சென்று காளைதன்னாமமும் ஏதமில் தந்தை யெய்திய நாமமும் போதச் செப்பலும் போந்து பணிந்தனன். | 269 |
நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை அந்த மில் குணத் தையநீ ராரென் முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச் சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன். | 270 |
விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென் தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு எஞ்சு லின்னிலை மையது வென்றென விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான். | 271 |
முனிவனின் கூற்று
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம் உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத் தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான் கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின் | 272 |
நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்
மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத் தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின் தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும் ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன். | 273 |
மேனி கழ்வென மெய்த்தவர் கூறின் தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன் வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை ஈன மில்கும் ரன்னினி தேறினான். | 274 |
நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்
அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத் தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில் இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன். | 275 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.