அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால் நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான் | 51 |
அரசர் சுற்றத்தின் இயல்பு
கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன் றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின் அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே. | 52 |
அரசியர்
மற்றவன் றேவியர் மகர வார்குழைக் கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார் இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய முற்றுறா முலையினார் கலையின் முற்றியார் | 53 |
அரசியர் இயல்பு
பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார் செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார் வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம் அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார் | 53 |
காமம் பூத்த காரிகையர்
காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார் தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார் தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார் வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார். | 55 |
பட்டத்து அரசிகள் இருவர்
ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர் மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார் சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என் றேயுரை யிலாதவ ரிருவ ராயினார் | 56 |
பெருந்தேவியர் இருவரின் பெற்றி
நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும் ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல் வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள் | 57 |
மங்கையர்க்கரசியராகும் மாண்பு
பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார் மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத் தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே. | 57 |
இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்
பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும் மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும் திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார் | 59 |
மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்
மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள் இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட் கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே | 60 |
மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்
சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார் பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக் கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார். | 61 |
மாலாகி நிற்கும் மன்னன்
மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான் செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும் தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான் | 62 |
முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக் கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே. | 63 |
3.குமாரகாலச் சருக்கம்
தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்
ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண் டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார் வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல் ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார் | 64 |
மிகாபதி விசயனைப் பெறுதல்
பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க் கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத் தண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான் | 65 |
சசி திவிட்டனைப் பெறுதல்
ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச் சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான் நீரணங் கொளிவளை நிரந்து விம்மின ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார் | 66 |
விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்
திசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர் இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர் நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப் பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே | 67 |
மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்
செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று எய்தினார் குமரராம் பிராய மெய்தலும் மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார் ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே | 68 |
விசயனுடைய உடல், கண், குஞ்சி,காது
காமரு வலம்புரி கமழு மேனியன் தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன் தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன் பூமரு பொலங்குழை புரளுங் காதினன் | 69 |
மாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை
வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன் தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன் கோடுயர் குன்றெனக் குலவு தோளினன் பீடுடை நடையினன் பெரிய நம்பியே | 70 |
திவிட்டனுடய உடல் முதலியன
பூவயம் புதுமலர் புரையு மேனியன் துவிரி தாமரை தொலைத்த கண்ணினன் தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன் மாவிரி திருமறு வணிந்த மார்பினன் | 71 |
கை முதலியன
சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை தங்கிய வங்கைய னடித்தண் போதினன் மங்கல மழகளி றனைய செல்கையன் இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே | 72 |
இருவரும் இளமை எய்துதல்
திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம் யுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய் எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார் | 73 |
மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்
உவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர் அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர் கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார். | 74 |
மங்கையர் மயங்குதல்
கடலொளி மணிவணன் கனவில் வந்தெம துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான் விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென மடவர லவர்குழா மயக்க முற்றதே |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.