நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின்
கொடு விற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை,
கொடியோள் கணவல் படர்ந்திகும் எனினே,
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ, 425
ஓம்புநர் அல்லது, உடற்றுநர் இல்லை;
ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே
மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல்
தேம் பட மலர்ந்த அராஅ மெல் இணரும்,
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்,
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, 430
திரங்கு மரல் நாரில், பொலியச் சூடி,
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென,
உண்டனிர், ஆடி, கொண்டனிர் கழிமின்
புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல்
செவ் வீ வேங்கைப் பூவின் அன்ன,
வேய் கொள் அரிசி, மிதவை சொரிந்த, 435
சுவல் விளை நெல்லின், அவரை அம் புளிங் கூழ்,
அற்கு, இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;
பொன் எறிந்து அறைந்தன்ன நுண் நேர் அரிசி 440
வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை,
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,
அசையினிர் சேப்பின், அல்கலும் பெறுகுவிர்
விசையம் கொழித்த பூழி அன்ன,
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை: 445
நொய்ம் மர விறகின் ஞெகிழ் மாட்டி,
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி,
புலரி விடியல் புள் ஓர்த்துத் கழிமின்
நன்னனது தண் பணை நாட்டின் தன்னை
புல் அரைக் காஞ்சி, புனல் பொரு புதவின்,
மெல் அவல், இருந்த ஊர்தொறும், நல் யாழ்ப் 450
பண்ணுப் பெயர்த்தன்ன, காவும், பள்ளியும்,
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்,
நன் பல உடைத்து, அவன் தண் பணை நாடே:
உழவர் செய்யும் உபசாரம்
கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,
வலையோர் தந்த இருஞ் சுவல் வாளை, 455
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்,
பிடிக் கை அன்ன, செங் கண் வராஅல்,
துடிக் கண் அன்ன. குறையொடு விரைஇ,
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்,
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த, 460
விலங்கல் அன்ன, போர் முதல் தொலைஇ,
வளம் செய் வினைஞர் வல்சி நல்க,
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்,
இளங் கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும், பெறுகுவிர்;
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு, 465
'வண்டு படக் கமழும் தேம் பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி கான்ம்' எனக்
கண்டோ ர் மருள, கடும்புடன் அருந்தி,
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி, அசையினிர், கழிமின் 470
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.