22. அழற்படு காதை
ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் | 5 |
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் | 10 |
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு தாமிடை கொள்ள | 15 |
நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் | 20 |
நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் புலரா துடுத்த உடையினன் மலரா வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம் கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன் தேனும் பாலும் கட்டியும் பெட்பச் | 25 |
சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன் தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும் ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன் நன்பகல் வரவடி யூன்றிய காலினன் | 30 |
விரிகுடை தண்டே குண்டிகை காட்டம் பிரியாத் தருப்பை பிடித்த கையினன் நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியோடு | 35 |
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் வென்றி வெங்கதிர் புரையும் மேனியன் குன்றா மணிபுனை பூணினன் பூணொடு முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு சண்பகம் கருவிளை செங்கூ தாளம் | 40 |
தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த குங்கும வருணங் கொண்ட மார்பினன் | 45 |
பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன் முகிழ்த்தகைச் சாலி அயினி பொற்கலத் தேந்தி ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில் | 50 |
பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின் முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு எனவிவை பிடித்த கையின னாகி | 55 |
எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன | 60 |
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன் வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி | 65 |
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன் வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல் சேட னெய்தல் பூளை மருதம் கூட முடித்த சென்னியன் நீடொளிப் | 70 |
பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம் தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன் கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக் கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு | 75 |
நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப் பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில் உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ் | 80 |
சூழொளித் தாலு மியாழும் ஏந்தி விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக் | 85 |
கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர் விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் கருவிளை புரையு மேனிய னரியொடு வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக் | 90 |
காழகம் செறிந்த உடையினன் காழகில் சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் காட்டிய பூவிற் கலந்த பித்தையன் கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச் | 95 |
செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் | 100 |
கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கோமுறை பிழைத்த நாளி லிந்நகர் தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப தாமுறை யாக அறிந்தன மாதலின் | 105 |
யாமுறை போவ தியல்பன் றோவெனக் கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக் கூல மறுகும் கொடித்தேர் வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் | 110 |
உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன் காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்டக் கறவையும் கன்றும் கனலெரி சேரா | 115 |
அறவை யாயர் அகன்றெரு அடைந்தன மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன் | 120 |
செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம் பரிந்தன பரந்த | 125 |
தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி | 130 |
வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத வருவிருந் தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து சிலம்பின் வென்ற சேயிழை நங்கை | 135 |
கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப் பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித் தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் | 140 |
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் | 145 |
ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன அந்தி விழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க் | 150 |
காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் | 155 |
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென்.
வெண்பா
மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் | 160 |
மதுரா பதியென்னு மாது. |
[இக்காதையின் பாடல் வரிகள்
17 முதல் 33 வரையும்
37 முதல் 50 வரையும்
67 முதல் 84 வரையும்
89 முதல் 96 வரையும்
111 ஆம் வரியும்
பிற்கால இடைச்சேர்க்கையென உரையாசிரியர் பலரும் கருதுவர்.]
17 முதல் 33 வரையும்
37 முதல் 50 வரையும்
67 முதல் 84 வரையும்
89 முதல் 96 வரையும்
111 ஆம் வரியும்
பிற்கால இடைச்சேர்க்கையென உரையாசிரியர் பலரும் கருதுவர்.]
23. கட்டுரை காதை
சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி இடமருங் கிருண்ட நீல மாயினும் | 5 |
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள் இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும் வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக் | 10 |
கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து ஒருமுலை குறைத்த திருமா பத்தினி அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன் | 15 |
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் கேட்டிசின் வாழி நங்கையென் குறையென வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோவென | 20 |
ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய் மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன் கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப் பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் | 25 |
வருந்திப் புலம்புறு நோய் தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத் தீதுற வந்த வினை; காதின் | 30 |
மறைநா வோசை யல்ல தியாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றுங் கோலனு மல்லன் இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் | 35 |
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா உள்ளத் தோடு மாயினும் ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு | 40 |
இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் அரைச வேலி யல்ல தியாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து | 45 |
மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று வச்சிரத் தடக்கை அமரர் கோமான் | 50 |
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை | 55 |
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள் புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன் பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன் தாங்கா விளையுள் நன்னா டதனுள் | 60 |
வலவைப் பார்ப்பான் பராசர னென்போன் குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் காடும் நாடும் ஊரும் போகி | 65 |
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க | 70 |
நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப் பார்ப்பன வாகை சூடி ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர் தங்கா லென்ப தூரே அவ்வூர்ப் | 75 |
பாசிலை பொதுளிய போதி மன்றத்துத் தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி | 80 |
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி பூந்தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக் குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் | 85 |
தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக் குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென் பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச் சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் | 90 |
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது உளமலி உவகையோ டொப்ப வோதத் தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து | 95 |
முத்தப் பூணூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத் தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப் | 100 |
கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென இடுசிறைக் கோட்டத் திட்டன ராக வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் | 105 |
புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் திறவா தடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் | 110 |
கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென ஏவ லிளையவர் காவலற் றொழுது வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி | 115 |
அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் | 120 |
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் கலையமர் செல்வி கதவந் திறந்தது | 125 |
சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும் உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக் | 130 |
கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண | 135 |
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும் உரையு முண்டே நிரைதொடி யோயே கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும் | 140 |
காம்பெழு கானக் கபில புரத்தினும் அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முள் பகையுற இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ் | 145 |
செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின் அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர் அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் | 150 |
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன் பரத னென்னும் பெயரனக் கோவலன் விரத நீங்கிய வெறுப்பின னாதலின் | 155 |
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக் கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங் காணாள் நீலி என்போள் அரசர் முறையோ பரதர் முறையோ | 160 |
ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் | 165 |
கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் எம்முறு துயரம் செய்தோ ரியாவதும் தம்முறு துயரமிற் றாகுக வென்றே விழுவோ ளிட்ட வழுவில் சாபம் பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ | 170 |
உம்மை வினைவந் துருத்த காலைச் செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை | 175 |
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின் கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக் | 180 |
கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு | 185 |
அவல என்னாள் அவலித்து இழிதலின் மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற் கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் | 190 |
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப் பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி | 195 |
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு வான வூர்தி ஏறினள் மாதோ கானமர் புரிகுழற் கண்ணகி தானென். | 200 |
வெண்பா
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து.
கட்டுரை
முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் | 5 |
ஒடியா இன்பத் தவருடை நாட்டுக் குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் | 10 |
நேரத் தோன்றும் வரியுங் குரவையும் என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வடஆரியர் படைகடந்து தென்றமிழ்நா டொருங்குகாணப் | 15 |
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோ டொருபரிசா நோக்கிக் கிடந்த | 20 |
மதுரைக் காண்டம் முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.