விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்
அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின் மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல் தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான் | 266 |
அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது
மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம் உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும் அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய் இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான் | 267 |
சூழ்ச்சியின் மாண்பு
உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர் கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம் எரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான் | 268 |
இதுவுமது
பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால் வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய் | 269 |
செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்
கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள் இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக் கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே | 270 |
செவ்வி கேட்டல்
தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும் வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை யான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான் | 271 |
வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை
மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள் துஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே | 272 |
அது விண்ணுலகத்தைப் போன்றது
மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது புண்ணிய மில்லார் புகுதற் கரியது கண்ணிய கற்பகக் கானங் கலந்தது வின்ணிய லின்பம் விரவிற் றினிதே | 273 |
எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது
எல்லா விருதுவு மீனும் பொழிலின் தெல்லா நிதியு மியன்ற விடத்தின தெல்லா வமரர் கணமு மிராப்பகல் எல்லாப் புலமு நுகர்தற் கினிதே | 274 |
பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன | 275 |
அந்நாட்டுப் பொழில் முதலியன
கானங்க ளாவன கற்பகங் காமுகர் தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில் நானங்க ளாவன நாவி நருவிரை வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ ? | 276 |
மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன் குணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம் கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம் பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால் | 277 |
வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்
ஆங்கதன் மேல வறுபது மாநகர் தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந் தோங்கிய சூளா மணியி னொளிர்வது | 278 |
இரத்தின பல்லவம்
மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும் திருத்தின வில்லது செம்பொ னுலகில் புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண் ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே | 279 |
அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது
வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி முளைத்தெழு காம முடிவில ராகித் திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம் களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே | 280 |
அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்
ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர் பாடக மெல்லோர் பரவிய சீறடி தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத் தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே | 281 |
வருத்தமுள்ள நகர்
சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார் முலைத்தடம் பாய முரிந்து முடவண் டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே | 282 |
முரிவன பல
வனைத்தன போலும் வளர்ந்த முலையார் இனைந்துதங் காதல ரின்பக் கனிகள் கனிந்து களித்தகங் காமங் கலந்துண முனிந்து புருவ முரிவ பலவே | 283 |
அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்
செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும் அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர் ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே | 284 |
அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது
வளர்வன போலு மருங்குல்க ணோவத் தளர்வன போல்பவர் தாமக் குழன்மேற் கிளர்வன போதிள வாசங் கிளைத்துண் டுளர்வன போதரு மூதை யுளதே | 285 |
அந்நகரத்தே அஞ்சி மறைவன
பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச் செங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற் கஞ்சா வொளிக்கு மயல ததுவே | 286 |
இன்றமிழியற்கை யின்பம்
பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர் தூசினு ணின்று சொரிமணிக் கோவையும் பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை மூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம் | 287 |
காதல் தூது
காம விலேகையுங் கற்பக மாலையும் சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு தூமக் குழலவர் தூது திரிபவர் தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய் | 288 |
காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்
தாமத் தொடையல் பரிந்து தமனிய வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள் காமக் கடலைக் கலக்குங் கழலவர் தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே | 289 |
வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்
பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின் மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள் மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான் | 290 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.