கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 16 ஜூன், 2012

சூளாமணி, -1-15

   அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்


மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான்
376



தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்


வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே
377


பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்
378



சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்


ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே
379



சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்


அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்
380


மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்


முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திருமொழி யகத்து மாதராள்
என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்
கன்னவ னாதிமா புராண மோதினான்
381



உலகங்கள் எண்ணிறந்தன என்றல்


மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்
தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே
382



உலக அமைப்பு உரைத்தல்


மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளிசினை நாவன் மாமரம்
அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே
383


உலகில் உள்ளன


குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே
384


மாற்றறு மண்டில மதனு ளூழியால்
ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது
பாற்றரும் புகழினாய் பரத கண்டமே
385


பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது


மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்
386


போக காலம் கழிதல்


வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே
387



அருகக் கடவுள் தோற்றம்


ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய்
388


உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது


ஆரரு டழழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே
389



அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்


அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்
புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
நலங்கிளர் திருமொழி நாத னென்பவே
390



பரதன் என்னும் அரசன்


ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய
வீங்கிய விரிதிரை வேலி காவலன்
ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே
391



பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்


ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊ ழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்
392


பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்


கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே
393



அருகக் கடவுள் கூறுதல்


என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே
394



முதல் வாசுதேவனை மொழிதல்


மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே
395


அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்


கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் கன்னி யேதுவால்
ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்
தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே
396



பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்


தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே
397



அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்


ஆதியு மந்தமு நடுவு நம்மதே
ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது
போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே
398



மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்


அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய
கன்னவி விலங்குதோட் காளை யானவன்
மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்
மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான்
399


இதுவுமது


திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்
பொருவரு போதன முடைய பூங்கழல்
செருவமர் தோளினான் சிறுவ ராகிய
இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே
400

   அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்

கானுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே
401

திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்

ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்
402

சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்

கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே
403

நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்
404

சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்

இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல்
திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச்
சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென்
றருநிதி வளங்கொணா டாள நல்கினான்
405


அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்

மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான்
406

மக்கட்பேற்றின் மாண்பு கூறல்

தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே
407

குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்

தலைமகள் றாடனக் காகச் சாகைய
நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே
408


நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்

சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே
409

நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்

தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்
410

மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்

வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே
411

நீ சிறப்படைந்தாய் எனல்

மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்
செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்
412


சுயம்பிரபையின் பெருமை

மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான்
413

வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்

மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை
ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக
முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்
414


சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்

மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே
415

இதுவும் அது

பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்பொன் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்
416


அரசன் இன்புற்றிருத்தல்

திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்
417


மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்

மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்
418


சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்

வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார்
419


பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்

தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே
420

மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்

கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்
குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்
மற்றவன் மருசியே யவனை நாம்விடச்
சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே
421


மரீசியைத் தூது அனுப்புதல்

காரியந் துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்
422

மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்

மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்
துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய
பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே
423


வண்டினம் களியாட்டயர்தல்

புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்
பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென
மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
கதுமல ரினையொடு கலவி யார்த்தவே.
424

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;