இவ்வாசிரியர், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்தவர் என்பது இவ்விரு காப்பியங்களின் பதிகம் வழி அறிய முடிகிறது. ‘‘இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றச் சாத்தனார் கேட்டார்’’ என்றும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட அடிகள் கேட்டார்’’ என்றும் இப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரத்தில், மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவனுடன் இளங்கோவும் சாத்தனாரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், கண்ணகி விண்ணகம் சென்ற காட்சியைக் கண்டு, செங்குட்டுவனுக்குக் குன்றக் குறவர்கள் அறிவிக்க, உடன் இருந்த சாத்தனார் “யான் அறிகுவன்” என்று சொல்லிக் கோவலனும் கண்ணகியும் அடைந்த துன்பக் கதையை எடுத்துரைக்கிறார். கதை கேட்ட இளங்கோ ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என்று கூற, சாத்தனார் ‘அடிகள் நீரே அருள்க’ என்கிறார். இங்கு, இளங்கோ சிலப்பதிகாரம் பாடக் காரணமாக இருந்தவர் சாத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலக் கட்டத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பர். இளங்கோ ‘தண்டமிழ்ச் சாத்தன்’, ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூல் புலவன்’ என்று சாத்தனாரைக் குறிப்பிடுவதால் இவர் இளங்கோவடிகளுக்கு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. சாத்தனார் பாடியதாகச் சங்க இலக்கியங்களில் சில பாடல்கள் காணப்படுகின்றன. ஆயின், சங்கப் பாடல்கள் பாடிய கூலவாணிகன் சாத்தன் வேறு; மணிமேகலை பாடிய சாத்தன் வேறு என்பது அறிஞர் முடிவு. எவ்வாறாயினும் இக்காப்பியம் எழுந்த காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.