பற்கள் தோன்றுதல்
வாம வாணொடு நோக்கிம டங்கனி தூம வார்குழ லாடுவர் வாயிடை நாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு காம னாளரும் பிற்கடி கொண்டவே. | 151 |
சுயம்பிரபை வித்தைகளடைதல்
மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால் அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய் விஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன் எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே | 152 |
சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்
நங்கை தோன்றிய பின்னகை வேலினாற் கங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில் தங்க நீண்முடி யாற்றலை நின்றனர் வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே | 153 |
வேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்
நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும் பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள் வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள் | 154 |
வேனில் வரவைக் கூறுதல்
தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன! பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக் கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல் பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள் | 155 |
வண்டுகள் களிப்பு
வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத் தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித் தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார் மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம் | 156 |
இசைக்குப் பரிசில்
கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர் படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக் கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே | 157 |
தீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்
அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த் துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம் செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே | 158 |
வண்டுகள் மயக்கமும் தெளிவும்
அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச் செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே | 159 |
மாமரமும் மனந்திரிந்த செல்வரும்
மாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித் தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும் தாஞ்சுவை திரிந்த பிஇன்றைச் சார்பவ ரில்லை யன்றே | 160 |
பொழில்கள் புலம்புதல்
கோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர் பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன் ஆவிகொண் டிவளிக் கைவிட் டகலுமோ வென்று தத்தம் பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம் | 161 |
அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்
வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும் கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி நயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே | 162 |
வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்
கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித் தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற் றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே | 163 |
மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்
கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக் குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே | 164 |
புகழ் பாடிப் பூவிறைத்தல்
கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல் கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே | 165 |
தென்றல் வீசுதல்
குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த் தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய் விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல் புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே | 166 |
அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்
இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை மன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன் தன்னவா மடவாரைத் தானுவந்து பொழில்காட்டி மின்னவா மிடைநோவ விளையாட வருளினான் | 167 |
இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது
எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம் பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம் வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில் புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே | 168 |
கைகளும் இடைகளும்
காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச் சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே | 169 |
மாந்தளிர் முதலியவை
மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித் தாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே | 170 |
கண்மலர்
காவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி வாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே தூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார் ஆவியுய்ந் துள்ளாராத லரிதேயிவ் விள வேனில் | 171 |
வேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்
இன்னண மிளையவர் மருள வீண்டுசீர் மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக் கன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான் | 172 |
திருக்கதவம் திறத்தல்
உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன் குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை வலமுறை வந்தனன் வரலு மாமணிக் கலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே | 173 |
சுடர் விளங்குதல்
பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம் மணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே | 174 |
அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்
மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன் கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான் வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன் செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான் | 175 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.