வேறு - வரிப்பாட்டு
எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்
அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும் அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே | 176 |
படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்
பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே இகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும் அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே | 177 |
ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்
திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும் அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே | 178 |
வேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்
இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன் சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன் கன்னவி றிருமனிக் கபாடந் தாழுறீஇ மின்னிய திருநகர் முற்ற முன்னினான் | 179 |
சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்
ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச் சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன் ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம் சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார் | 180 |
வேறு - வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்
விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய் உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை யுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங் கண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே | 181 |
இதுவுமது
முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக் கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே | 182 |
இதுவுமது
மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய் குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம் கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே | 183 |
வேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்
தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக் காதலி னெழுவிய காம ரின்னிசை யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே | 184 |
சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்
இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில் குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார் மறமலி மன்னனை நோக்கி மற்றவற் கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார் | 185 |
சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்
தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும் என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும் நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும் சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே | 186 |
அரசன் சென்று பணிதல்
வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை மூன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும் மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும் சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான் | 187 |
முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்
பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும் தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான் | 188 |
முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்
தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர் நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம் தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான் | 189 |
சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்
முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன் றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும் பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக் கனியமற் றின்னணங் கடவுள் கூறினான் | 190 |
தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்
துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா லின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம் மன்னநின் மனத்துள தென்ன மாமணிக் கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான் | 191 |
வேறு - சாரணர் அறிவுரை - பிறவிகள் அளவிடற் கரியன என்றல்
மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தில் மையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ | 192 |
நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்
சூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தினாலே வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித் தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான் | 193 |
அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்
காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப் போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி யாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய் மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா | 194 |
இரத்தினத் திரயம்
மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய் | 195 |
இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்
உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கிச் சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப் பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய் மற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா | 196 |
அறிவுரை கேட்டோ ர் மகிழ்ச்சி யடைதல்
அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும் திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும் விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம் பரிந்தகங் கழுமத் தேறிப் பாவம் பரிந் தவர்க ளொத்தார் | 197 |
அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்
மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப் பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால் கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான் பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே | 198 |
வேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்
மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள் பன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால் பின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள் | 199 |
அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்
முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன் பனிமலர் விரவிய படலை மார்பினான் கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர் இனிதினின் வலமுறை யெய்தி யேகினான் | 200 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.