அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்
வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில் காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர் தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர் நாமவே னரபதி நகர நண்ணினான் | 201 |
சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்
அகநக ரரைசரோ டரைசன் சென்றபின் சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர் மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப் பகனகு கடரொளி படர வேகினார் | 202 |
சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்
அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக் குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால் எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள் | 203 |
மனநலத்தின் மாட்சி
முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல் நகைத்தவார் குழலவ டன்மை யாயினும் வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா வகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே | 204 |
நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்
இந்திர வுலகமும் வணக்கு மீடுடைத் தந்திர நோன்பொளி தவழத் தையலாள் மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா வந்தர வழற்கொடி யனைய ளாயினாள் | 205 |
நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்
தாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென் றோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின் றீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதக் காங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள் | 206 |
சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்
தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக் கண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை விண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள் | 207 |
வேறு - வரிப்பாட்டு - சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்
ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை போதியங் கிழவனை யொதுங்கிய சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம் | 208 |
இதுவுமது
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை தேமலர் மாரியை திருமறு மார்பனை தேமலர் மாரியை திருமறு மார்பனை மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம் | 209 |
ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை யோரரு ளாழியை யுலகுடை யொருவனை யோரரு ளாழியை யுலகுடை யொருவனை சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம் | 210 |
வேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்
கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம் வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால் மருவுடை மொழிகளாற் பரவி வாமன திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள் | 211 |
சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்
வானுயர் கடவுளை வயங்கு சேவடித் தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின் மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன் கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள் | 212 |
சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்
வெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுகன் னஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின் செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான் | 213 |
அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்
அல்லியி னரவண் டிரிய வாய்மலர் வல்லியின் வணங்கிய மகளை மன்னவன் முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான் | 214 |
ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்
தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார் வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே | 215 |
கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா மங்கணீ ருலகெலா மறியப் பட்டது நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே | 216 |
போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத் தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே | 217 |
வானகத் திளம்பிறை வளர வையகம் ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே நானகக் குழலிநீ வளர நங்குடி தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே | 218 |
கண்பகர் மல்லிகை கமழக் காதலால் சண்பகத் தனிவனந் தும்பி சாருநீ பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி மண்பக ருலகெலா மகிழச் செல்லுமே | 219 |
அரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்
கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட் கிவ்வகை யணியன கூறி யீண்டுநும் மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென மவ்வலங் குழலியை மன்ன னேயினான் | 220 |
கட்டளையும் மகிழ்ச்சியும்
பல்கலம் பெரியன வணியிற் பாவைத னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே செல்கவென் றிருமக ளென்று செம்பொனான் மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான் | 221 |
அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்
மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும் விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும் பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க் கெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான் | 222 |
தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்
மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக் கையணி நெடுநல்வேற் காளை மார்களுள் நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான் மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே | 223 |
மங்கையர் இயற்கை
பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி யிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும் குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும் மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ | 224 |
தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்
அந்தைதா முறுவது கருதி யாருயிர்த் தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார் சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ | 225 |
காமமுங் காதலும்
காதலா லறிவது காமங் காதலே யேதிலா ருணர்வினா லெண்ண லாவதன் றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ லோதினா ருரைவழி யொட்டற் பாலதே | 226 |
அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்
தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென வின்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கையே தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி தின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார் | 227 |
அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்
தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும் புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும் கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே | 228 |
அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்
மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக் காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் மேலவ ரொழுக்கமும் வேலை காணுமே | 229 |
உலகம் பலவிதம்
ஒன்றுநன் றென உணர்ந் தொருவன் கொள்ளுமே லன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமே நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே | 230 |
ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்
அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும் மந்திர மில்லையேன் மலரு மாண்பில இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர் தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே | 231 |
அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்
என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர் நின்றநூற் கிழமையி னீதி மாக்களை யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார் சென்றவர்க் கருளிது வென்று செப்பினார் | 232 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.