15. அடைக்கலக் காதை
நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட | 5 |
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித் | 10 |
தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலங் கொண்டு குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து | 15 |
தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண் வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக் கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக் கோவலன் சென்று சேவடி வணங்க நாவ லந்தணன் தானவின் றுரைப்போன் | 20 |
வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து வாலா மைந்நாள் நீங்கிய பின்னர் மாமுது கணிகையர் மாதவி மகட்கு | 25 |
நாம நல்லுரை நாட்டுது மென்று தாமின் புறூஉந் தகைமொழி கேட் டாங்கு இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள் புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் | 30 |
நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் உன்பெருந் தானத் துறுதி யொழியாது துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென | 35 |
விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் மணிமே கலையென வாழ்த்திய ஞான்று மங்கல மடந்தை மாதவி தன்னொடு | 40 |
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன் தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் | 45 |
பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி | 50 |
மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களி றடக்கிய கருணை மறவ பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல | 55 |
வடதிசைப் பெயரும் மாமறை யாளன் கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப் பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் | 60 |
மாட மறுகின் மனைதொறு மறுகிக் கருமக் கழிபலங் கொண்மி னோவெனும் அருமறை யாட்டியை அணுகக் கூஉய் யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி | 65 |
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக் கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் | 70 |
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ | 75 |
பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும் பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு | 80 |
கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென நன்னெடும் பூதம் நல்கா தாகி நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை | 85 |
ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் | 90 |
இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது விருத்தகோ பால நீயென வினவக் கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால் | 95 |
காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக் கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும் அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும் பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும் | 100 |
மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து காமக் கடவுள் கையற் றேங்க அணிதிகழ் போதி அறவோன் றன்முன் மணிமேகலையை மாதவி யளிப்பவும் நனவுபோல நள்ளிருள் யாமத்துக் | 105 |
கனவு கண்டேன் கடிதீங் குறுமென அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின் அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக் | 110 |
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன் மாட மதுரை மாநகர் புகுகென மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் றனக்குக் கூறுங் காலை அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய | 115 |
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும் ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் | 120 |
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள் மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் | 125 |
தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும் இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் | 130 |
மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித் தேமென் கூந்தற் சின்மலர் பெய்து தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் | 135 |
தாயும் நீயே யாகித் தாங்கிங்கு என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் | 140 |
தன்துயர்காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க் கின்றியமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது | 145 |
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் | 150 |
காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள் பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல் உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித் தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன் | 155 |
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப் பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச் | 160 |
சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு யாதிவன் வரவென இறையோன் கூறும் எட்டி சாயலன் இருந்தோன் றனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர் மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி | 165 |
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப் பாற்படு மாதவன் பாதம் பொருந்தி உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும் தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி | 170 |
எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின் மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக் காதற் குரங்கு கடைநா ளெய்தவும் | 175 |
தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின் மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள் உத்தர கௌத்தற் கொருமக னாகி உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப் | 180 |
பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின் பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம் தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப் | 185 |
பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானந் தன்னால் ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச் சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத் | 190 |
தேவ குமரன் தோன்றினன் என்றலும் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி ஆரணங் காக அறந்தலைப் பட்டோர் அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும் தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் | 195 |
இட்ட தானத் தெட்டியும் மனைவியும் முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர் கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு நீட்டித் திராது நீபோ கென்றே கவுந்தி கூற உவந்தன ளேத்தி | 200 |
வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள் முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக் கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு | 205 |
செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் | 210 |
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும் | 215 |
கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென். |
16. கொலைக்களக் காதை
அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப் பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் | 5 |
காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச் செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக் கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் | 10 |
செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள் ஐயை காணீ ரடித்தொழி லாட்டி பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி | 15 |
ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள் நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச் சாவக நோன்பிக ளடிக ளாதலின் நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் | 20 |
நெடியா தளிமின் நீரெனக் கூற இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற் கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் | 25 |
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி சாலி யரிசி தம்பாற் பயனொடு கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் | 30 |
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன கரிபுற அட்டில் கண்டனள் பெயர வையெரி மூட்டிய ஐயை தன்னொடு கையறி மடைமையிற் காதலற் காக்கித் தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் | 35 |
கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின் கடிமல ரங்கையிற் காதல னடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல் | 40 |
தண்ணீர் தௌித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு | 45 |
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி யீங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை | 50 |
விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையுந் தவ்வையும் விம்மிதம் எய்திக் கண்கொளா நமக் கிவர் காட்சி யீங்கென உண்டினி திருந்த உயர்பே ராளற்கு அம்மென் திரையலோ டடைக்கா யீத்த | 55 |
மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி எம்முது குரவர் என்னுற் றனர்கொல் | 60 |
மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கி யாவதும் அறியேன் வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் | 65 |
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய் என்செய் தனையென | 70 |
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் | 75 |
முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் நொடிவது போலுமென் வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் | 80 |
போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக் குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி | 85 |
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே | 90 |
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய் மாறி வருவன் மயங்கா தொழிகெனக் கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா | 95 |
ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி வருபனி கரந்த கண்ண னாகிப் பல்லான் கோவல ரில்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன் இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான் | 100 |
தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின் தாதெரு மன்றந் தானுடன் கழிந்து மாதர் வீதி மறுகிடை நடந்து பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய | 105 |
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித் தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக் | 110 |
காவலன் றேவிக் காவதோர் காற்கணி நீவிலை யிடுதற் காதி யோவென அடியேன் அறியே னாயினும் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக் கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் | 115 |
போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன் மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் | 120 |
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை யெனமுன் போந்து விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக் கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் | 125 |
தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப் பரந்து வௌிப்படா முன்னம் மன்னற்குப் புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக் கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் | 130 |
கூடன் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக் | 135 |
குலமுதல் தேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் | 140 |
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக் கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும் துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக் கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் | 145 |
கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென் சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென வினைவிளை கால மாதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரான் ஆகி ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென் | 150 |
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும் ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத் | 155 |
தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவரெனச் செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் | 160 |
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன் கொலைப்படு மகனலன் என்றுகூறும் அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக் கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன் | 165 |
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுட னன்றே இழுக்குடை மரபிற் கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது மருந்திற் பட்டீ ராயின் யாவரும் | 170 |
பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் மந்திர நாவிடை வழுத்துவ ராயின் இந்திர குமரரின் யாங்காண் குவமோ தெய்வத் தோற்றம் தௌிகுவ ராயின் கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர் | 175 |
மருந்தின் நங்கண் மயக்குவ ராயின் இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும் புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும் தந்திர கரணம் எண்ணுவ ராயின் | 180 |
இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர் இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின் அவ்விடத் தவரை யார்காண் கிற்பார் காலங் கருதி அவர்பொருள் கையுறின் மேலோ ராயினும் விலக்கலு முண்டோ | 185 |
கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின் இருநில மருங்கின் யார்காண் கிற்பார் இரவே பகலே என்றிரண் டில்லை கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை தூதர் கோலத்து வாயிலின் இருந்து | 190 |
மாதர் கோலத்து வல்லிருட் புக்கு விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத் துயில்கண் விழித்தோன் தோளிற் காணான் | 195 |
உடைவாள் உருவ உறைகை வாங்கி எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான் மல்லிற் காண மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக் கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர்க் | 200 |
குண்டோ வுலகத் தொப்போ ரென்றக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர் திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும் நிலனகழ் உளியன் நீலத் தானையன் கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று | 205 |
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக் கைவாள் உருவஎன் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன் அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும் | 210 |
உரிய தொன் றுரைமின் உறுபடை யீரெனக் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் | 215 |
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்.
நேரிசை வெண்பா
நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்-மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை. |
17. ஆய்ச்சியர் குரவை
கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும்வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல்கேட்பப் பாரரசாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் | 5 |
காலை முரசங் கனைகுர லியம்புமாகலின் நெய்ம்முறை நமக்கின் றாமென்று ஐயைதன் மகளைக் கூஉய்க் கடைகயிறு மத்துங் கொண்டு இடைமுதுமகள் வந்துதோன்றுமன்; | 10 |
உரைப்பாட்டு மடை
குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் | 1 |
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு; உறிநறு வெண்ணெய் உருகா உருகும் | 2 |
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு; நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் | 3 |
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு;
கருப்பம்
குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந்தான்காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே;
கொளு
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் | 1 |
வேரி மலர்க் கோதையாள்;
கட்டு
நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் | 2 |
பொற்றொடி மாதராள் தோள்; மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம் | 3 |
முல்லையம் பூங்குழல் தான்; நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப் | 4 |
பெண்கொடி மாதர்தன் தோள்; பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமிந் | 5 |
நற்கொடி மென்முலை தான்; வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக் | 6 |
கொன்றையம் பூங்குழ லாள்; தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் | 7 |
பூவைப் புதுமல ராள்;
எடுத்துக் காட்டு
ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவரிளங் கோதை யார் என்றுதன் மகளை நோக்கித் தொன்றுபடு முறையால் நிறுத்தி இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை உழைஇளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே; மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை; மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான்; அவருள், வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர் வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப் பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே ஐயென்றா ளாயர் மகள்;
கூத்துள் படுதல்
அவர் தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்- முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணி யென்றாள்; எனாக், குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின் பின்றையைப் பாட்டெடுப் பாள்; |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.