துமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்
வேறு
திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீக்கலுண் முறைகெட முளைப்பதோர் முனிவினொள்ளெரி கரைப்படு படையவன் கனல் மூட்டினான் | 675 |
முடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேல் பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி யடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி கடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே | 676 |
படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி கடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோ டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை யெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே | 677 |
இதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்
உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ லெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே லழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே | 678 |
நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா டாளுது மன்றெனி லொழிது மேலெம தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ் வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள் | 679 |
விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை யடைலுடைக் கடுந்தொழி லரவி னாரழற் படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர் மடமுடை மனத்தனும் மயரி மன்னனே | 680 |
இருங்கலிப் படையினு மிகலி னாலுமெம் மருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர் மருங்குள தெனினது மகளி ராற்சில பெருங்கலத் தாங்கினாற் பெறலு மாகுமே | 681 |
பாழியான் மெலிந்தவற் திறத்துப் பண்டெலா மாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃ தேழைகா ளினியொழித் திட்டுச் செவ்வனே வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே | 682 |
அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொடு குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையா னின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன வென்றியாம் பகழியும் விசும்பு மீவனே | 683 |
இறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங் குறையிது கூறுமின் சென்று தூதிர்காள் திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர் முறையுள தெனினது முயன்று கொள்கவே | 684 |
உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங் கட்கமழ் கோதையர் கணமு மீண்டது வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத் துட்கெனு மனத்தினர் தூத ரேகினார் | 685 |
தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்
போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சி யாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனைக் கண்டே யேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி | 686 |
இதுவுமது
மீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு மோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கி யூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம் தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார் | 687 |
அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்
அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டே பெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா னிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானே சுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான் | 688 |
இதுவுமது
மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா னன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யா னொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக் குன்றிடைச் சீயந் தன்மேற் கொளப்புணர்த் திடுவனென்றான் | 689 |
அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்
அன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னு மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் றன்னைக் கூவிக் கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான் | 690 |
அம்மாயச்சிங்கத்தின் தன்மை
ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும் வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க் கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான் | 691 |
அவ்வரிமாவின் செயல்
இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து மலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீ ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான் | 692 |
அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்
பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப் புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார் | 693 |
அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்
அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண் மெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே யிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக் கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான் | 694 |
ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து பூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர் வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர் ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார் | 695 |
தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்
திரையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும் குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற வரையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைச னறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான் | 696 |
இதுவுமது
தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப விளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவ னொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா னளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான் | 697 |
தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு ளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுந் திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன் | 698 |
திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்
என்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தா னென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே சென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலறக் கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான் | 699 |
அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்
உனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற் களைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றி னுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி அளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார் | 700 |
திவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்
ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற வாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவ னேயிப் பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன் பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான் | 701 |
இதுவுமது
புழற்கைத் திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதா நிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுக வழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத் தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான் | 702 |
இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித் தேர் காலாட் கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக வெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே ருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான் | 703 |
விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்
நகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர்ப் பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச் சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின் மகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான் | 704 |
இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்
புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான் தொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார் | 705 |
அம்மாய அரிமாவின் முழக்கம்
அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா வுடைந்த போகவோ ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே பொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா | 706 |
அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்
காளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத் தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச் சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா ஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே | 707 |
அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்
எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப் பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச் செங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான் | 708 |
திவிட்டன் ஓடும் தன்மை
சுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்கா அழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு மெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே | 709 |
இதுவும் அது
மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்த நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த வரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதா முரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடைந் தொழிந்த | 710 |
அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்
மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க் கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங் காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா னோடி யிட்டன னொளிவரை முழையகத் தொளிந்தான் | 711 |
அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்
உலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின் நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப் பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே | 712 |
திவிட்டன் முழக்கம்
ஏங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தா யோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைந் துரவோ னாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான் வீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே | 713 |
அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்
அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த கதிருங் கண்களிற் கனலெனச் சுடர்களுங் கனல முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே | 714 |
எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும் விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள் சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா விரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே | 715 |
அவ்வரிமா வெளிப்படுதல்
தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை வாரித் தீட்டிவண் வந்ததோ ரரியென மதியாப் பூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப் பாரித் திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார் | 716 |
திவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்
அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான் பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே | 717 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.